காசி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம் அனுமதி!

காசி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம் அனுமதி!

த்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இந்துக்களின் மிகப்பெரிய புனிதத் தலமாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தினை ஒட்டி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. இந்த மசூதியின் சுவரில் அமைந்துள்ள சிங்கார கௌரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 2021ம் ஆண்டில் இந்துப் பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. அதனையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மசூதியின் ஒசுகானாவின் நடுவில் ஒரு சிவலிங்கம் அமைந்திருப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து, கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று நான்கு பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது. ஆனால், மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் இந்த ஆய்வுக்கு இடைக்கால தடை பெறப்பட்டது.

இதற்கிடையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவின் மீது, கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக, ‘கியான்வாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டால் அது மசூதியின் கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்ற வாதம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, ‘நீதியை நிலைநாட்ட அறிவியல்பூர்வ ஆய்வு தேவைப்படுகிறது’ என்றும் நீதிமன்றம் கூறி இருக்கிறது.

இது குறித்து, அம்மாநில முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், "அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். தொல்லியல் துறையின் ஆய்வுக்குப் பிறகு உண்மை என்னவென்பது தெரியவரும். அதன் மூலம் கியான்வாபி பிரச்னையில் தீர்வு ஏற்படும்" என்று கூறி இருக்கிறார். அதேபோல், இந்து பெண்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த ஆய்வு தொல்லியல் துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களின் அடிப்படையில் நடைபெறும்" என்று கூறி இருக்கிறார். மேலும், கியான்வாபி மசூதியில் நடைபெற உள்ள இந்த ஆய்வு குறித்து முஸ்லிம் தலைவர் காலீத் ரஷீத் ஃபிராங்கி மஹாளி, “தங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பு உள்ளது” என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com