இந்தியாவில் இனிமேல் எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம்!

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

ரிமோட்டில் இயங்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. தேர்தலின் போது வாக்காளர்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்யும் வகையிலும், வெளிமாநிலங்களிலிருந்து வேலை நிமித்தம் புலம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் வாக்களிக்க வசதியாகவும் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ரிமோட்டில் இயங்கும் இந்த நவீன வாக்குப் பதிவு இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தால் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த மீண்டும் தங்கள் ஊருக்குப் பயணிக்க வேண்டியதில்லை. தற்போதுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைப் போலவே புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தரமானவை, சிறப்பாக செயல்படுபவை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நவீன வாக்குப் பதிவு இயந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, இதன் செயல்பாடுகளை விளக்கி அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான விளக்கக் காட்சி வருகிற ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் நேரிலும், எழுத்துமூலமும் தங்களது யோசனைகளைத் தெரிவிக்காலம். தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

இந்த நவீன இயந்திரத்தை பொதுத்துறை நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு வாக்குச்சாவடியிலிருந்து 72 தொகுதிகளை கையாள முடியும். தொலைதூரத்தில் உள்ள வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை ரிமோட் மூலம் செலுத்த முடியும்.

தேர்தல் ஜனநாயகத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்களிக்க வசதியாக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த நவீன வாக்குப் பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் 1951, தேர்தல் நடத்தும் விதிமுறைகள் சட்டம் 1961 மற்றும் தேர்தல் விதிகள் சட்டம் 1960 ஆகியவற்றில் உரிய திருத்தம் மேற்கொண்ட பிறகே ரிமோட் மூலம் வாக்களிக்கும் முறை அமலுக்கு வரும்.

கடந்த 2019 தேர்தலில் 67.4 சதவீதம் பேர் வாக்களித்தனர். மேலும் 30 கோடி மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தவில்லை. பெரும்பாலானவர்கள் வீடு மாற்றம், இடமாற்றம் காரணமாக வாக்களிக்க முன்வருவதில்லை. வேறு மாநிலங்களுக்கு தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்தவர்களாலும் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்யவேண்டும் என்ற நோக்கில்தான் ரிமோட்டில் வாக்களிக்கும் இயந்தரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com