உலக அளவில் ஐ பி எல் (டி-20) தொடர் பிரபலமாகியுள்ள நிலையில், இவ்வாண்டு முதல் மகளிர் ஐ பி எல் (Women IPL) WIPL (டி 20) போட்டிகளை நடத்த பி சி சி ஐ திட்டமிட்டு இருக்கிறது.
மார்ச் மாதம் 3 முதல் 26 வரை நடைபெற உள்ள இத்தொடரில் 5 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த மகளிர் அணிகளை வாங்க உரிமையாளர்கள் ஐந்து பேர்கள், ஏற்கெனவே ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கவில் முதன் முறையாக நடை பெற்றுவரும் எஸ். ஏ.20 தொடரில் விளையாடும் ஆறு அணிகளையும், ஐ பி எல் உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளனர்.
கடைசி நாளான 21 ஆம் தேதி மாலைவரை சுமார் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் கணிசமாக உள்ளன எனவும் தெரியவந்துள்ளது.
அதானி குழுமம், GMR, JSW, போன்ற பல பெரிய நிறுவனங்களுடன் நாக்பூரில் பிரசித்தி பெற்ற இனிப்பு விற்பனை நிறுவனமான ஹல்திராமும் ஏலத்தில் பங்கேற்கவிருக்கிறது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீராம், நீலகிரி, செட்டிநாடு குழுமங்களும் மற்றும் ஜே.கே. சிமெண்ட்ஸ், அமீரகம் உட்பட வெளிநாடுகளில் டி 20 அணிகளை வைத்திருக்கும் தொழில் நிறுவனங்களும் இதில் களமிறங்கியுள்ளன.
ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பக் கட்டணம் – ஐந்து லட்சம்.
பங்கேற்கும் நிறுவனம் கையாளும் சொத்தின் மதிப்பு 1000 கோடிக்கும் மேல்.
WIPL போட்டிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமத்தை வயாகாம் -18 நிறுவனம் 951 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அணிகள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரியில் நடைபெற இருக்கிறது.
சரியான ஏலப்போட்டி!