ஒற்றுமை யாத்திரையில் குளிர்தாங்கும் ஜாக்கெட்டுடன் ராகுல்!

ஒற்றுமை யாத்திரையில் குளிர்தாங்கும் ஜாக்கெட்டுடன் ராகுல்!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

மொத்தம் 3,750 கி.மீ. தொலைவு கொண்ட இந்த யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, பஞ்சாப், இமாச்சலம் வழியாக ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ளது. இந்த யாத்திரை வரும் 30 தேதி மகாத்மா காந்தி நினைவுநாளில் காஷ்மீரீல் நிறைவடைகிறது.

அவரது இந்த யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் முதல் முறையாக குளிர்தாங்கும் ஜாக்கெட் அணிந்திருந்த்தை காண முடிந்த்து. கடும் பனிப்பொழிவையும் பொருட்பாடுத்தாமல் அவர், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியான கதுவா மாவட்டம் ஹட்லி மோர்ஹ் பகுதியிலிருந்து தனது யாத்திரையை வெள்ளிகிழமை தொடர்ந்தார். அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த்து.

வட மாநிலங்களில் யாத்திரை செல்லும் போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர் வெறும் டீ ஷர்ட் மட்டுமே அணிந்திருந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் அவரிடம் “டீ ஷர்ட் மட்டுமே அணிந்திருக்கிறீர்களே. உங்களுக்கு குளிரவில்லையா” என்று கேட்டதற்கு, நாட்டில் எத்தனையோ ஏழை மக்கள் கிழிந்த ஆடைகள் அணிந்திருக்கும் நிலையில் டீ ஷர்ட் மட்டுமே அணிய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் தில்லியில் கடும் குளிர் நிலவிய போதிலும் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது அவர் டீ ஷர்ட் மட்டுமே அணிந்திருந்தார். அப்போது அவரிடம் மீண்டும் டீ ஷர்ட் அணிவது பற்றிய கேள்வியை எழுப்பியபோது, ஏழைத் தொழிலாளர்கள், விவசாயிகளிடம் இதே கேள்வியைக் கேளுங்கள் என்று பதில் கூறியிருந்தார்.

எனினும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒற்றுமை யாத்திரையில் வெள்ளை டீ ஷர்ட்டுக்கு மேல் குளிர்தாங்கும் ஜாக்கெட் அணிந்திருந்தார்.

ஜம்முவில் நுழைந்த அவரை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட

தலைவர்கள் வரவேற்றனர். முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாவட்ட எல்லைப் பகுதியில் அவருக்கு மேளதாள நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில், ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹலில் வரும் 25 ஆம் தேதி ராகுல் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் அனந்தநாக் வழியாகச் சென்று 27 ஆம் தேதி ஸ்ரீநகர் வந்தடைகிறார்.

சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த சஞ்சய் ரெளத்தும் ஜம்முவில் ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றுள்ளார். ராகுலின் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அடுத்த தேர்தலில் யார் நாட்டுக்கு தலைவராக வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.

இதனிடையே டோங்க்ரா ஸ்வாபிமான் சங்கதான் சங்காதன் கட்சியின் (டிஎஸ்எஸ்பி) தலைவர் செளுதுரி லால் சிங், ராகுலின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மெஹ்பூபா முப்தி கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் பா.ஜ.க. பிரமுகரான லால் சிங், 2018 ஆம் ஆண்டு நடத்த கதுவா பாலியல் சம்பவம் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com