பொது சந்தை திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசி மற்றும் கோதுமையை ஒன்றிய அரசு நிறுத்தியது.
நாடு முழுவதும் தற்போது அரிசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நடப்பு ஆண்டில் பருவமழை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அரிசியினுடைய தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி இல்லாத அரிசி வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் நாடு முழுவதும் அரிசியினுடைய விலை கிலோ 10 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அரிசியின் விலை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அரிசி தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்,“ OMSS எனப்படும் Open Market Sale Scheme திட்டமான பொது சந்தை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை விற்பனை கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் உள்ள அரிசி மற்றும் கோதுமையினுடைய இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து, மேலும் போதிய கையிருப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வெளிச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுப்பதற்காக இந்திய உணவுக் கழகம் உணவு தானியங்களை பொதுச் சந்தை திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. ஆனால் தற்போது எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை குறைவு போன்ற காரணங்களால் பயிர்கள் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போதிய அளவு விளைச்சல் இல்லாமல் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு என்பது நிலவி வருவதாக கூறப்பட்டுள்ளது. இது தற்காலிக நடவடிக்கை தான் என்றாலும், உற்பத்தி பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.