சஞ்சய் குமார் மிஸ்ரா
சஞ்சய் குமார் மிஸ்ரா

செப்.15 வரை அமலாக்கத்துறை இயக்குநர் மிஸ்ரா பதவியில் நீடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

மலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 வரை நீட்டிக்க்க மத்திய அரசு அனுமதி கேட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

விசாரணையின் போது சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்க இந்த அளவு முனைப்பு காட்டும்போது, அந்த துறையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் திறமையற்றவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவில்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பெரும்பான்மை பொதுநலன் மற்றும் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், செப்டம்பர் 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் அவர் அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் தொடரக்கூடாது என்று தெரிவித்தனர்.

சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த போதிலும் அவருக்கு இரண்டு முறை ஓராண்டு பதவி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியது. இதனிடையே அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளாக இருந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. அதன் மூலம் அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் 18 ஆம் தேதி வரை சஞ்சய் குமார் மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக இருக்கும் வகையில் மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம் மூன்றாவது முறை பணி நீடிப்பு சட்ட விரோதம் என தீர்ப்பளித்தது. அதேநேரம் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) இந்த ஆண்டில் மேற்கொண்டு வரும் மதிப்பாய்வு பணிகள் எந்தவித பாதிப்புமின்றி  நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த்து.

இந்த நிலையில் எஃப்ஏடிஎஃப் மதிப்பாய்வு பணிகளை கருத்தில் கொண்டு மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 வரை நீட்டிக்க அனுமதிக்கும் வகையில் தீர்ப்பில் மாற்றம் செய்யுமாறு கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பர் 15 வரை அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

நிதி நடவடிக்கை பணிக்குழு என்பது சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுப்பதற்கான பன்னாட்டு அரசுகளிடையிலான அமைப்பாகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com