வடகிழக்கு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்தத் தவறியதற்காக மத்திய அரசு மற்றும் நாகாலாந்து அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக கடிந்து கொண்டுள்ளது.
நாகாலாந்தில் ஆளுங்ட்சியின் ஒரு அங்கமாக பா.ஜ.க. இருப்பதால் நீதிமன்றம் கடுமையாக குறிப்பிட்டுள்ளது. “இது உங்கள் அரசாங்கம்தானே. மாநிலத்தில் வேறு சிலர் ஆட்சி செய்வதாக கூறி தப்பிக்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு 74-வது சட்டத்திருத்தம் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இரட்டை இன்ஜின் அரசு தள்ளாடுகிறது.
தனது பார்வையை நாகாலாந்துக்கு மட்டும் மையப்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், உங்களுக்கு இணங்காத மாநில அரசுகளுக்கு எதிராக நீங்கள் தீவிர நிலைப்பாட்டை எடுப்பீர்கள். உங்களுக்கு சொந்தமான, உங்கள் ஆதரவுடன் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் மாநிலங்களில் அரசியலமைப்புச் சட்ட விதிகள் மீறப்படும்போது அதை கண்டுகொள்ள மாட்டீர்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு அளவுகோலையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மற்றொரு அளவுகோலையும் மத்திய அரசு கடைப்பிடிப்பதையே இது காட்டுகிறது.
மணிப்பூர் விடியோ சம்பவம் நாட்டையே உலுக்கியபோது பா.ஜ.க. அதை கண்டுகொள்ளாமல் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்குவங்கத்திலும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களைப் பற்றி பேசுகிறது. எதிரணியினர் மீது குற்றஞ்சாட்டுவது புதிது அல்ல. ஆனால், பாகுபாடுகளுக்கு அப்பால் உயர்ந்து கூட்டாட்சி தத்துவத்தை வளர்ப்பத்தெடுக்கும் வகையில் முன்மாதிரியாக இருக்கும் பொறுப்புக்கு மத்திய அரசுக்கு உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்துவதில் அதீத ஆர்வம் காட்டுவதிலும் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது. ஊழலை வேறுடன் களைவது என்பது இந்திய அளவில் முழுமையானதாக இருக்க வேண்டுமே தவிர அது குறிப்பிட்ட சிலர் மீது எடுக்கப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடாது.
இதேபோல அமலாக்கத்துறை இயக்குநரக தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம், செல்லாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்த பிறகும் அவருக்கு மேலும ஒரு நீட்டிப்பு தருமாறு மத்திய அரசு நீதிமன்றத்தை வற்புறுத்தியது விரும்பத்தகாத ஒன்றாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு செவிசாய்ப்பதும், தவறுகளை திருத்திக் கொள்வதும்தான் ஒரு நல்ல அரசுக்கு அடையாளம்.
எதிர்க்கட்சிகள் விவகாரத்தில் மத்திய அரசின் மாறுபட்ட போக்கை உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. நாகாலாந்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத விவகாரம் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தில் மத்திய அரசு குறுக்கிடுவதாகவும் புகார்கள் உள்ளன.
மானியங்கள் வழங்குவதிலும், நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு மாநிலங்களிடம் பாரபட்சமான போக்கை கடைப்பிடிப்பிடித்து வருகிறது. மத்திய அரசு, மாநிலங்களிடம் நட்புறவைப் பேணி, கூட்டாகச் செயல்பட்டு, புரிதலுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு ஆகும்.