மல்யுத்த வீரர்கள் சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிரிஜ் பூஷன் சிங் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தில்லி போலீஸார் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளபோதிலும் அவர் சம்மேளனத்தில் தலைவர் பதவிலியிலிருந்து ராஜிநாமா செய்ய மறுத்து வருகிறார்.
அவரிடம் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது அவரிடம் பிரிஜ் பூஷன் முறைதவறி நடந்து கொண்டதுடன் அவரது மைக்கையும் பிடுங்கி சேதப்படுத்தியுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின்
படி பிரிஜ் பூஷன் மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் முன்னணி மல்யுத்த வீராகள், வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பிரிஜ்பூஷன் மீது தில்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
தில்லி போலீஸார் இது தொடர்பாக விரிவாக புலனாய்வு நடத்தி பிரிஜ்பூஷனுக்கு எதிராக 1000 பக்கத்துக்கு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். போலீஸார் 15 பேர் மீது விசாரணை நடத்தியதில் அதில் 7 மல்யுத்த வீராங்கனைகள் தங்களிடம் பிரிஜ் பூஷன் பாலியல் துன்பறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
பாலியல் துன்புறத்தல், பாலியல் சீண்டல், கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், மிரட்டி பணியவைத்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தில்லி ரோஸ் அவென்யூவில் உள்ள விசாரணை நீதிமன்றம் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை ஜூலை 18 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.