அமைச்சரின் இந்த பதில் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

அமைச்சரின் இந்த பதில் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

ஐ.ஐ.டிகள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி, நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

அதாவது, ஐ.ஐ.டிகள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்கு ஓராண்டு காலக் கெடுவோடு செப்டம்பர் 5, 2021 அன்று பணி நியமனத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. எல்லா இட ஒதுக்கீடு நிலுவை காலியிடங்களையும் நிரப்பப் போவதாகவும் சொல்லப்பட்டது.

இந்த கல்வி நிறுவனங்களில் கடந்த செப் 5, 2021 அன்று இருந்த பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் இட ஒதுக்கீடு காலியிடங்கள் எவ்வளவு, நிரப்பப்பட்ட இடங்கள் எவ்வளவு, ஓராண்டு கெடு முடிந்த செப் 4, 2022 அன்று எவ்வளவு இட ஒதுக்கீடு காலியிடங்கள் இருக்கின்றன, நிலுவை இட ஒதுக்கீடு இடங்களின் எண்ணிக்கை தரப்பட்டனவா என்று கேள்விகளை எழுப்பி இருந்தேன். (கேள்வி எண் 1848/ 19.12.2022).

அதற்கு பதில் அளித்த மாண்புமிகு மத்திய கல்வி இணை அமைச்சர் அன்ன பூர்ணா தேவி, 23 ஐ.ஐ.டி கள், 45 மத்திய பல்கலைக் கழகங்கள் குறித்த விவரங்களை தந்துள்ளார் எனக் கூறிப்பிட்டு அந்த பதிலை வெளியிட்டுள்ளார்.

  இதில் கரக்பூர், வாரணாசி, கவுகாத்தி, ஹைதராபாத், ஜோத்பூர், ரோபார், பாலக்காடு, ஜம்மு, ஆகிய 8 ஐ.ஐ.டிகள் "நெகிழ்வு பதவி அமைப்பை" (Flexible Cadre Structure) கொண்டிருப்பதால் அவற்றில் இட ஒதுக்கீடு இடங்களை அடையாளம் காண இயலவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

பாட்னா ஐ.ஐ.டியில் ரோஸ்டர் 2021 இல் பராமரிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற 14 ஐ.ஐ.டி களில் கடந்த 05.09.2021 அன்று மொத்த நிலுவை காலியிடங்கள் 342. அவற்றில் ஓ.பி.சி 156, எஸ்.சி 98, எஸ்.டி 50 என இருந்துள்ளன. பிரிவு வாரி தகவல்கள் இல்லாதவை 38 காலியிடங்கள் ஆகும். ஓராண்டு கழித்து 04.09.2022 அன்று மொத்த நிலுவை காலியிடங்கள் 358 இருக்கின்றன. அவற்றில் ஓ.பி.சி 185, எஸ்.சி 113, எஸ்.டி 60 காலியிடங்கள் நிலுவையாக உள்ளன. இதுதவிர நடப்பு ஆண்டு 151 காலியிடங்களில் 82 ஓ.பி.சி, 46 எஸ்.சி, 23 எஸ்.டி இடங்கள் நிரம்பவில்லை.

 சென்னை ஐ.ஐ.டியில் 2021 இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 44. பணி நியமனங்களுக்கு பிறகு நிரம்பாத நிலுவை காலியிடங்கள் 16 ஆகும். கரக்பூர், ரூர்கி, தான்பாத், திருப்பதி, கோவா, தார்வார் ஆகிய ஐ.ஐ.டி களில் ஒரு எஸ்.டி தேர்வர் கூட நியமனம் பெறவில்லை. ஐ.ஐ.டி ரூர்கியில் ஒரு எஸ்.சி தேர்வர் கூட நியமனம் பெறவில்லை. பெரும்பாலான ஐ.ஐ.டி கள் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பதவிகளுக்கு எஸ்.சி, எஸ்.டி, ஓ. பி. சி தேர்வர்களுக்கு நியமனம் தரவில்லை. உதவி பேராசிரியர் பணியிடங்களில் மட்டுமே நியமனம் தந்துள்ளனர்.

 அமைச்சர் 45 மத்திய பல்கலைக் கழகங்களின் விவரங்களையும் தந்துள்ளார். அவற்றில் 12 மத்திய பல்கலைக் கழகங்கள் இட ஒதுக்கீடு காலியிடங்கள் 0 என காண்பித்துள்ளன. இட ஒதுக்கீடு காலியிடங்கள் அடையாளம் காணப்படவில்லையா, நிலுவை இடங்களே இல்லையா என்பது ஐ.ஐ.டி விவரங்களில் தரப்பட்டது போல இதில் சொல்லப்படவில்லை.

மற்ற 33 மத்தியப் பல்கலைக் கழகங்களில் கடந்த செப்டம்பர் 5, 2021 இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 1099. அவற்றில் ஓ.பி.சி 408, எஸ்.சி 424, எஸ்.டி 267 என இருந்துள்ளன. ஓராண்டு கெடு வைத்து பணி நியமனங்கள் நடந்து முடிந்த பின்னர் செப்டம்பர் 4, 2022 இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 919. அவற்றில் ஓ.பி.சி 340, எஸ்.சி 341, எஸ்.டி 238 என இருந்துள்ளன. இந்த ஓராண்டில் நிரப்பப்பட்டு உள்ள நிலுவை காலியிடங்கள் 212 மட்டுமே. அவற்றில் ஓ.பி.சி 84, எஸ்.சி 94, எஸ்.டி 34 இடங்கள் ஆகும். 

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் 05.09.2021 அன்று இருந்த மொத்த நிலுவை காலியிடங்கள் 24. அவற்றில் ஓ.பி.சி 9, எஸ்.சி 8, எஸ்.டி 7 என இருந்துள்ளன. ஓராண்டில் நிரப்பப்பட்டுள்ள நிலுவை காலியிடங்கள் 6 மட்டுமே (ஓ.பி.சி 3, எஸ்.சி 1, எஸ்.டி 2).

பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் 05.09.2021 அன்று இருந்த மொத்த நிலுவை காலியிடங்கள் 49. அவற்றில் ஓ.பி.சி 11, எஸ்.சி 21, எஸ்.டி 17 என இருந்துள்ளன. ஓராண்டில் நிரப்பப்பட்டுள்ள நிலுவை காலியிடங்கள் 23 மட்டுமே (ஓ.பி.சி 8, எஸ்.சி 9, எஸ்.டி 6).

அமைச்சரின் இந்த பதில் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஐ.ஐ.டி களில் "இலக்கு இடப்பட்ட பணி நியமனங்கள்" துவங்கிய போது இருந்த இட ஒதுக்கீடு காலி இடங்களை விட ஓராண்டு கெடு முடிந்த பின்னர் நிலுவை காலியிடங்கள் அதிகரித்துள்ளன. பல மத்தியப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்புவதற்கான முனைப்பு காட்டப்பட்டதாகவே தெரியவில்லை.

ஐ.ஐ.டி களில் 342 இட ஒதுக்கீடு காலியிடங்கள் ஓராண்டில் நடப்பு இடங்களையும் சேர்த்து 509 இட ஒதுக்கீடு காலியிடங்களாக அதிகரித்துள்ளது.

8 ஐ.ஐ.டி கள் அதாவது 30 சதவீதத்திற்கும் அதிகமான ஐ.ஐ.டி கள் "நெகிழ்வு பதவி அமைப்பை" வைத்துள்ளோம் என்று சொல்லி இட ஒதுக்கீடு எண்ணிக்கையை தரவில்லை. பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் என எல்லாப் பதவிகளுக்கும் தனித் தனியாக இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.

இப்படி சில ஐ.ஐ.டி.கள் தனி முறைமையை வைத்திருப்பது இட ஒதுக்கீடு கோட்பாடுகளை மீறுவது ஆகும். இதில் அதை வெளிப்படுத்தாத மற்ற ஐ.ஐ.டிகளிலும் இந்த நடைமுறை இருக்கிறது என்றே நினைக்கிறேன். எல்லா நேரடி நியமனங்களிலும் இட ஒதுக்கீடு ரோஸ்டர் தனித் தனியாக கடைப்பிடிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். உரிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.

 இட ஒதுக்கீட்டு மீறல்கள் பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பினாலும், அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினாலும் உயர்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி பெற்றவை என்று பதில் தரப்படுகிறது. இப்படி அரசு கை கழுவ முடியாது. அந்த நிறுவனங்களின் தன்னாட்சி என்பது அரசியல் சாசனத்திற்கும் விஞ்சிய தன்னாட்சி அல்ல.

இவ்வளவு காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றால் எத்தனை விண்ணப்பங்கள் வந்தன? ஏன் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

சில நிறுவனங்களில் "போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை" என்றும் "யாரும் தகுதி பெறவில்லை" என்றும் காரணங்கள் காண்பிக்கப்படுகிறது.

இப்போதாவது புதிய ரோஸ்டர்கள் எல்லா ஐ.ஐ.டி, மத்தியப் பல்கலைக் கழகங்களில் தயாரிக்கப்பட்டு காலியிடங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். புதிய நியமன அறிவிக்கைகள் வெளியிடப்பட வேண்டும். இட ஒதுக்கீடு மீறல்களை தடுக்க விரிவான வழிகாட்டல்களை கல்வி அமைச்சகம் வழங்க வேண்டும். சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும். இது குறித்து கல்வி, சமூக நீதி அமைச்சர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதவுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com