உத்தரப்பிரதேசத்தில் கடையில் திருட்டு, தங்கம் அல்ல தக்காளி!
உத்தரப்பிரதேச மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் மார்க்கெட் பகுதியில் இரண்டு கடைகளில் பொருள்கள் திருட்டுபோயின. திருடப்பட்டது தங்கமோ அல்லு வெள்ளிப் பொருளோ அல்ல. இப்போது தங்கத்துக்கு நிகராக கருதப்படும் தக்காளிதான்!
நாடு முழுவதும் விலை உயர்ந்துள்ளதால் தக்காளி இப்போது ஆடம்பர பொருளாக மாறியுள்ளது. தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ.140 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் தக்காளி விலையை கேட்டால் நீங்கள் மயங்கி விழுந்துவிடுவீர்கள். அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சாதாரணமாக கிலோ ரூ.20 அல்லது ரூ.30-க்கு விற்கப்படும் தக்காளி தற்போது கிலோ ரூ.100-க்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு ஒரு கிலோ தக்காளி வாங்கியவர்கள் இப்போது விலை அதிகம் என்பதால் கால் கிலோ மட்டுமே வாங்கி வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் மற்றும் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் வேறு பயிர்சாகுபடிக்கு மாறியதால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலையேற்றம் காரணமாக மக்கள் தக்காளி வாங்கவே தயக்கம் காட்டி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் சிறிய ஹோட்டல் நடத்தி வந்த கணவர், மனைவியை கேட்காமல் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்தி வந்ததால் அவரது மனைவி கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் தக்காளி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் விலை பேரத்தில் ஈடுபட்டு சண்டைக்கு வருவதால் ஒரு கடைக்காரர் தனது கடைக்கு இரண்டு பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த கடைகளில் 26 கிலோ தக்காளி திருட்டு போயுள்ளது. ராம்ஜி மற்றும் நயீம் கான் என்ற இரு வியாபாரிகள் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனர். அடுத்த நாள் காலையில் வந்து கடையை திறந்தபோது தக்காளி திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார், காம்தா பிரசாத், முகமது இஸ்லாம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் கர்நாடக மாநிலம் ஹஸ்ஸன் மாவட்டத்தில் ஒரு விவசாயிக்கு சொந்தமான பண்ணைக் கடையிலிருந்து 1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் திருட்டுப்போன செய்தி பெரும்பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.