இஸ்ரோவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் தற்போது நிலவின் மேற்பரப்புக்கு அருகே 174×1437 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டுள்ளது. இந்த தூரம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி மேலும் குறைக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் சந்திரயான் விண்கலம் நிலவுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில்தான் ரஷ்யாவும் அதன் சந்திர கிரகணப் பயணத்தைத் தொடங்க இருக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யா மூன் மிஷனை செயல்படுத்த இருக்கிறது. இது, வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி நடக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. Russia Luna 25 என்ற விண்கலம் ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
மேலோட்டமாக பார்த்தால் மற்ற நாடுகளைப் போல ரஷ்யாவும் நிலவை ஆய்வு செய்யப்போகிறது, இதனால் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது என்றே தோன்றும். ஆனால் ரஷ்யாவின் விண்கலமும் இந்தியாவின் விண்கலமும் ஒரே நாளில் ஒரே பகுதியில் நிலவில் தரையிறங்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த இரண்டு விண்கலங்களுமே நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த இடத்தில் தான் தனித்துவமான பனிக்கட்டிகள் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏனென்றால் அது சூரிய ஒளி படாத இடம் என்பதால், எவ்விதமான சூழல் மாற்றங்களும் அங்கே நிகழ்ந்திருக்காது. எனவே அந்த இடத்தை ஆய்வு செய்து பார்த்தால்தான், அங்கே குடிநீர் இருக்கிறதா அல்லது எரிபொருள், ஆக்ஸிஜன் ஏதாவது இருக்கிறதா என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடியும்.
இதன் காரணமாகவே இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய முயற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆனால் அங்கே தரையிறங்குவது சவாலாக இருக்கும் நிலையில், ரஷ்யாவின் விண்கலமும் அதே நாளில் தென்துருவத்தில் தரையிரங்கினால் அது சந்திரயான் 3 விண்கலத்திற்கு ஏதாவது சிக்கலை ஏற்படுத்துமோ என இந்திய விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
ஆனால் இரண்டு விண்கலங்களும் ஒரே துருவத்தில் தரையிறங்கினாலும், அவை தரையிறங்கும் பகுதி வெவ்வேறு என்பதால், இரண்டு விண்கலமும் ஒன்றுக்கொன்று குறுக்கிடாது என ரஷ்ய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.