
இந்திய ரயில்வே, நாடு முழுவதும் உள்ள 6,115 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை (Wi-Fi) வசதியை வழங்கி வருகிறது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது குறித்து கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "இந்திய ரயில்வேயில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மூலம் 4G/5G இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நெட்வொர்க்குகளும் பயணிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இது பயண அனுபவத்தை மேம்படுத்துகிறது.
இவை தவிர, 6,115 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவையும் வழங்கப்பட்டுள்ளது," என்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்த நிலையங்களில், பயணிகள் HD வீடியோக்களைப் பார்க்கலாம், பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைப் பதிவிறக்கலாம் மற்றும் இலவச வைஃபை மூலம் அலுவலக வேலைகளையும் செய்யலாம்.
வைஃபை சேவையைப் பயன்படுத்த, பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனில் வைஃபை ஆன் செய்து, 'RailWire' வைஃபையுடன் இணைக்க வேண்டும்.
தங்கள் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து, எஸ்எம்எஸ் மூலம் வரும் ஓடிபி-ஐ உள்ளிட்டு வைஃபை சேவையை பயன்படுத்தத் தொடங்கலாம்.
இந்தத் திட்டத்தில் டெல்லி, மும்பை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், புனே, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, சூரத், வதோதரா, ராஜ்கோட், மீரட், போபால், ரோத்தக் மற்றும் கட்டாக் போன்ற பல சிறிய நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில் நிலையங்களில் உள்ள இலவச வைஃபை வசதியை, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் (RailTel), அதன் 'RailWire' பிராண்ட் மூலம் வழங்குகிறது.
ரயில்டெல் நிறுவனம், இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக கூகுள் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் போன்ற நிறுவனங்களுடன் முன்பு இணைந்து செயல்பட்டது.
ஆனால், தற்போது ரயில்டெல் நிறுவனம் அதன் நிர்வாகத்தையும், அணுகலையும் தானே கவனித்துக்கொள்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம், சாலை போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து ₹90.08 கோடி மதிப்புள்ள பெரிய ஆர்டரை ரயில்டெல் பெற்றது.
ரயில்டெல் நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி 2023-ல் தோராயமாக ₹105 ஆக இருந்தது. இன்று, ஆகஸ்ட் 12, 2025 நிலவரப்படி, அதன் விலை சுமார் ₹347 ஆக உள்ளது.
இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு பங்குக்கு ₹242 வரை லாபம் கிடைத்திருப்பது தெளிவாகிறது.