அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலய திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து ஜனவரி 23 முதல் ராமர் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக நாடு முழுவதிலிருந்தும் அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் இந்த ரயில் சில குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். ராமர் ஆலய திறப்பு விழாவுக்குப் பின்னர் 100 நாட்கள் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஐ.ஆர்.சி.டி.சி. மூலமே இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவை செய்ய முடியும். மேலும் இந்த ரயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு, அதிவேகரயில் கட்டணம், கேட்டரிங் கட்டணம், சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவையும் வசூலிக்கப்படும்.
தில்லியில் புதுதில்லி ரயில்நிலையம், ஆனந்த் விகார், நிஜாமுதீன், பழைய தில்லி ரயில்நிலையங்களிலிருந்து இந்த ரயில்கள் இயக்கப்படும்.
மகாராஷ்டிரத்தில் மும்பை, நாக்பூர், புனே, வார்தா, ஜல்னா, கோவா ரயில்நிலையங்களிலிருந்து இந்த ரயில் புறப்பட்டு அயோத்தி செல்லும்.
தெலங்கானாவில் செகந்திராபாத், காஸிபேட் ஆகிய இடங்களிலிருந்து இந்த ரயில் இயக்கப்படும்.
தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் சென்னை, கோவை, மதுரை மற்றும் சேலத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஜம்மு மற்றும் கட்ராவிலிருந்து அயோத்தி சிறப்பு ரயில் புறப்படும்.
குஜராத்தில் உத்னா, இந்தூர், மெஹ்சானா, வாபி, வதோதரா, பலன்பூர், வல்சாத், சபர்மதி ஆகிய இடங்களிலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், பினா, போபால், ஜபல்பூர் ஆகிய இடங்களிலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்விடப்படும்.
இதேபோல பல்வேறு மாநிலங்களிலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வடகிழக்கு பகுதியிலிருந்து ஐந்து மார்க்கங்களில் அயோத்திக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பெரும்பாலும் இவை அஸ்ஸாம், குவாஹாட்டியிலிருந்து இயக்கப்படும்.