இந்தியாவில் முதல் முறையாக கொச்சியில் நீர்வழி மெட்ரோ திட்டம்.

இந்தியாவில் முதல் முறையாக கொச்சியில் நீர்வழி மெட்ரோ திட்டம்.

நீரில் படகுகளில் பயணிப்பது என்றால் சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் மிக விருப்பமான ஒன்று. அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்திதான் இது.

கொச்சியில் 11 தீவுகளை இணைக்கும் நீர் வழி மெட்ரோ திட்டம் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட நிகழ்வுதான் சுற்றுலாப் பிரியர்களுக்கு இனிமை தருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக ரூபாய் 747 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கொச்சியில் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தை திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது காணொளி காட்சி மூலம் நேற்று பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

கொச்சிநகர் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி படகு மூலம் கடலில் சொகுசு பயணம் செய்து 11 தீவுகளுக்கும் சென்று ரசிக்கலாம். இந்த புதிய திட்டதின் மூலம் தரைவழியில் மட்டும் இருந்த மெட்ரோ திட்டம் கடல் வழியிலும் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொச்சியின்  படகு குழாமில் இருந்து புறப்பட்டு கோர்ட்டு, வைபின், காக்கநாடு துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் படகில் நூறு பேர்வரை பயணம் மேற்கொள்ளலாம். 78 கிலோமீட்டர் சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் உள்ளது போல  கழிப்பிடம், உணவு, குளிர்சாதன வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் நீர்வழி மெட்ரோ திட்டத்தின் கீழ் வரும்  படகுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகளை இந்த திட்டம் வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் வைபினில்  இருந்து கோர்ட்டுக்கு இருபது நிமிடங்களில் செல்லலாம். தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த படகு  சேவை தொடரும் நடைபெறும். காலை மாலை நேரத்தில் கோர்ட்டு வைபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் வழி மெட்ரோ இயக்கப்படும். பயணிகளுக்கு கட்டணம் ரூபாய் 20 முதல் ரூபாய் 40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செல்லக்கூடிய பயணிகள் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர கட்டணம் ரூபாய் 600 அரையாண்டு கட்டணம் ரூபாய் 1500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் பாஸ்களை முனையங்களில் உள்ள கவுண்டர் களில் க்யூஆர் கோடு பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைபிரிட் படகுகள்  மெட்ரோ சேவையில் பயன்படுத்தப்படுகிறது.

இனி கொச்சிக்கு செல்பவர்கள் இந்த நீர்வழி மெட்ரோ படகு சவாரிகளை மறக்காமல் சென்று அனுபவித்து வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com