

தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎஃப் திட்டம் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் ஒரு சிறு தொகை ஊழியர்கள் தரப்பிலிருந்து பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுவதுடன், அதே தொகை நிறுவம் தரப்பிலிருந்தும் பங்களிப்பு செய்யப்படுகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்து வட்டியும் கொடுக்கப்படுகிறது.
தற்போது இ.பி.எஃப்.ஓ அமைப்பை நவீனப்படுத்தும் 'இ.பி.எஃப்.ஓ 3.0' (EPFO 3.0)திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக, கணக்குகளைத் தூய்மைப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சமீபத்திய மறுஆய்வுக் கூட்டத்தில், 7.11 லட்சம் செயலற்ற கணக்குகளில் ரூ.30.52 கோடி தேக்கமடைந்துள்ளது தெரியவந்ததையடுத்து அதற்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த கணக்குகள் ஒவ்வொன்றிலும் ரூ.1000 அல்லது அதற்கும் குறைவான இருப்புத் தொகை மட்டுமே உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்த சிறு தொகைகளை (ரூ.1000) விரைவில் கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் திருப்பித் தரப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1,000 ரூபாய்க்கும் குறைவான இருப்பு கொண்ட கணக்குகள் கையாளப்பட்டாலும், அடுத்தடுத்த கட்டங்களில் மற்ற கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான சிறு கணக்குகளில் முடங்கிக் கிடக்கும் ரூ.30.52 கோடி நிதி, எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாகச் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிற்குச் செல்லவுள்ளது.
ஊழியர் அல்லது முதலாளி 36 மாதங்களுக்கும் மேலாக எந்த பங்களிப்பையும் டெபாசிட் செய்யப்படாத கணக்கு செயலற்றதாகக் கருதப்படுகிறது. அதன்படி, சுமார் 31.86 லட்சம் செயலற்ற பிஎஃப் கணக்குகளில் மொத்தம் ரூ.10,903 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றில், ரூ.1000 வரை இருப்பு வைத்திருக்கும் 7 லட்சம் கணக்குகளில் ரூ.30.52 கோடி தொகை உள்ளது.
இந்த நடைமுறைக்காக வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எந்தவொரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை, அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளில் உள்ள இந்த பிஎஃப் தொகை நேரடியாக அந்தந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்றும், கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் பணம் நாமினிக்கு அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை மாற்றம், ஓய்வு அல்லது சிறு தொகைகள் மீதான கவனமின்மை காரணமாக இவ்வளவு பெரிய அளவிலான கணக்குகள் தேக்கமடைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ள 'EPFO 3.0' திட்டமானது, வங்கிச் சேவை போன்ற அதிநவீன தொழில்நுட்பக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். தற்போதுள்ள உரிமைகோரல் தீர்வு காலக்கெடுவை 20 நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்கு குறைவாகக் குறைத்து ஒருங்கிணைந்த தளத்தில் உறுப்பினர் சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். காகிதமில்லா சேவை, குறைவான காத்திருப்பு காலம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், UPI மூலம் பணம் எடுக்கும் வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க வசதியையும் நிவாரணத்தையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.