விருதுநகருக்கு படையெடுக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்

விருதுநகருக்கு படையெடுக்கும்
வடமாநிலத் தொழிலாளர்கள்

சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணி மற்றும் கட்டுமான நிறுவனங்களில் எங்கு பார்த்தாலும் வடமாநில தொழிலாளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் பணியில் இருப்பார்கள். இவர்கள் கடும் உழைப்பாளிகள்.

இப்போது விருதுநகர் மாவட்டதிற்கு ரயில்மூலம் சுமார் 300 வடமாநிலத் தொழிலாளர்கள் பிழைப்புக்காக வந்திறங்கியுள்ளனர். இவர்கள் 50 குடும்பங்களாக பிரிந்து ஊருக்கு வெளியேயும், உள்ளேயும் வசித்து வருகிறார்கள்.

 பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், மளிகைப் பொருட்கள், எண்ணெய், மிளகாய் வத்தல் உற்பத்தி ஆகியவற்றுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் விருதுநகர். இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வியாபாரம் நிமித்தமாக தினமும் வந்து செல்கின்றனர்.

அண்மைக் காலமாக வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளது. அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்தி உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து கடந்த வாரம் ரயில் மூலம் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விருதுநகர் வந்தனர். நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இரும்புப் பட்டறைகளை அமைத்து அரிவாள், கத்திகள், மண் வெட்டி, கோடாரி, அரிவாள் மனை ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து பாலவநத்தம் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் வட மாநில தொழிலாளர்கள் கூறியதாவது:

எங்கள் மாநிலத்தில் போதிய அளவு விவசாயம் இல்லை, எங்களுக்கு கல்வியறிவும் குறைவு. பலர் பள்ளிக்குச் செல்லாததாலும், தொழிற்சாலைகளில் பலர் வேலைக்குச் செல்வதில்லை. அதனால், குடும்பம், குடும்பமாக ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளோம். கடந்த ஒரு மாதமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் வந்துள்ளோம்.

இங்கும் வேலை கிடைக்காததால், மதுரையில் இரும்புக் கடைகளில் இரும்பு பட்டாக்களை மொத்தமாக வாங்கி வந்து பட்டறை அமைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட இரும்புப் பொருட்களை தயாரித்து ரூ.50 முதல் ரூ.200 வரை விற்கிறோம். இதிலும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. கிடைக்கும் சொற்ப வருமானம் உணவுக்கே போதவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com