

லெபனானில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் , ஹோர்முஸ் ஜலசந்தியை வர்த்தக நடவடிக்கைகளுக்காக, வணிக கப்பல்களுக்கு மட்டும் திறக்கப்படுவதாக ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். வர்த்தக கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைக்கப்பட்ட பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை லெபனானில் போர் நிறுத்தம் நீடிக்கும் நாள் வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையில் 10 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. போரிலிருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என்று கூறினாலும் , தற்போது தாக்குதல் நின்றுள்ளதால் ஈரான் , அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு இணங்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டி தனது வலைதளத்தில் எழுதியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் உயரத் தொடங்கியுள்ளன.