

அமெரிக்க ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முழுமையாக நிறைவடையாத நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ஹேர்மூஸ் நீரிணையின் காரணமாக அதிரடி நடவடிக்கைகளும் சர்ச்சைகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் உலக நாடுகள் பாதிக்கும் என்பதுதான் கவலை தரும் விஷயமாக உள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளான உலக நாடுகளுக்கு ஒரு பெரும் நிவாரணமாக, வர்த்தகக் கப்பல்களுக்காக ஹேர்மூஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறந்ததாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இருப்பினும், ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான முற்றுகை "முழு வீச்சில் தொடரும்" என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க முற்றுகை காரணமாக சனிக்கிழமையன்று முக்கிய எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஹேர்மூஸ் நீரிணைக்கு முன் கிரேக்க, இந்தியக் கப்பல்கள் யூ-டர்ன் செய்தன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹேர்மூஸ் நீரிணை குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அவ்வப்போதைய வார்த்தைப் போர்களுக்கு மத்தியில் நீரிணையைக் கடக்க முயன்ற பல எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் யூ-டர்ன் செய்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையைத் தொடர்ந்தால், ஈரான் முக்கியத்துவம் வாய்ந்த ஹேர்மூஸ் ஜலசந்தியை மீண்டும் மூடும் என்றும்."முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருக்காது," என்று காலிபாஃப் எக்ஸ் தளத்தில் எழுதினார். மேலும், "அந்த நீர்வழிப்பாதை வழியாகப் பயணிப்பது ஈரானின் அங்கீகாரத்தைப் பொறுத்தது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிபர் டிரம்ப் "ஈரானுடனான நமது பரிவர்த்தனை முழுமையாக நிறைவடையும் வரை அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடரும்" எனும் பதிவை வெளியிட்டார். மேலும் "ஒரு முற்றுகை உள்ளது, துரதிர்ஷ்டவசமாக நாம் மீண்டும் குண்டுகளை வீசத் தொடங்க வேண்டும்." என்றும் அவர் கூறியுள்ளது உலகில் போர் குறித்த நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நெருக்கடிப் பகுதியை அனைவருக்கும் திறந்து வைப்போம் என்ற தனது வாக்குறுதியை ஈரான் நிறைவேற்றுமா என்பதை அறிய கப்பல் உரிமையாளர்களும் எண்ணெய் வர்த்தகர்களும் குழப்ப நிலையில் உள்ளனர்.