

அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை அதிகரித்தால் பாப் அல்மண்டப் ஜல சந்தியையும் மூடி விடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது . அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கெடு விதித்து இருந்தார். அது இன்றுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உலக எண்ணெய் வர்த்தகத்தில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தபடியாக உள்ள பாப்-அல்-மண்டப் சந்தியையும் மூடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த ஜலசந்தி, ஆசியாவில் உள்ள ஏமன் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூட்டி, எரித்திரியா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவை ஒட்டியுள்ள இந்த ஜலசந்தி வழியாக, உலகின் 10 சதவீத எண்ணெய் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாப்-அல்-மண்டப் ஜலசந்தி செங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும், அதன் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது.
ஆசியா - ஐரோப்பா வர்த்தகத்திற்கு இந்தப் பாதை மிகவும் முக்கியமானது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தரைவழித் தாக்குதல் அல்லது கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டால், மண்டப் ஜலசந்தியை முடக்குவோம் அல்லது கட்டுப்பாட்டில் எடுத்து மூடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் இந்த அச்சுறுத்தலை, ஏமனைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹௌதி (Houthi) கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் செயல்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற இவர்கள், ஏற்கனவே செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், பாப்-அல்-மண்டப் ஜலசந்தியும் மூடப்பட்டால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும். இதனால் எண்ணெய் விலை உயரும், பணவீக்கம் அதிகரிக்கும்; சர்வதேச கப்பல் நிறுவனங்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.