

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) முழுமையாக மாற்றி அமைக்கப்பட்ட தனது இணையவழி டிக்கெட் முன்பதிவு தளத்தின் புதிய வடிவத்தை இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) என்பது இந்திய ரயில்வே பயணிகளுக்கு டிக்கெட், உணவு, குடிநீர் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் முக்கிய அரசு நிறுவனமாகும்
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம். இது 27 செப்டம்பர் 1999 அன்று தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு டிக்கெட் பதிவு, உணவு மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முன்னேறி வரும் டெக்னாலஜி தந்த வசதிகளால் IRCTC-யிலும் பல முக்கிய பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் உணவு வழங்குதல் ஆகியவற்றை குறிப்பாக சொல்லலாம்.
மேலும் பயணிகளின் தாகம் தீர்க்கும் வகையில் Rail Neer என்ற குடிநீரை உற்பத்தி செய்து விநியோகித்தல், ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் (Retiring Rooms) மற்றும் விருந்தோம்பல் சேவைகளை நிர்வகித்தல். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்கள், சிறப்பு சுற்றுலா ரயில்கள் மற்றும் யாத்திரை திட்டங்களை நடத்துதல் ஆகியவற்றுடன் ஆன்லைன் கேட்டரிங் e-Catering மூலம் பயணிகள் தங்கள் இருக்கைக்கே உணவை ஆர்டர் செய்யும் வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதிகளுடன் மேலும் பயணிகளின் வசதிக்காக IRCTC-யின் மேம்படுத்தப்பட்ட டிக்கெட் முன்பதிவு இணையதளம் நிமிடத்திற்கு 1.5 லட்சம் முன்பதிவுகளைக் கையாளும் திறன் கொண்டு மேலும் பல மாற்றங்களுடன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மாற்றங்கள் இந்திய ரயில்வேயின் விரிவான டிஜிட்டல் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இணையதளத்தின் மெதுவான செயல்பாடு, கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் தோல்விகள் மற்றும் 'தத்கல்' (Tatkal) முன்பதிவு போன்ற அதிக நெரிசலான நேரங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்த பயணிகளின் நீண்டகால புகார்களுக்கு இது நேரடியாகத் தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பழைய இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தாங்கள் எதிர்கொண்ட கடுமையான சிரமங்களை மாணவர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த புதிய தளத்தின் அறிமுகத்தை துரிதமாக செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய தளத்தின் முக்கிய அம்சங்கள் :
மேம்படுத்தப்பட்ட இணையதளம் மூலம் இப்போது நிமிடத்திற்கு 1.5 லட்சத்திற்கும் (150,000) அதிகமான டிக்கெட் முன்பதிவுகளை செயல்படுத்தும் திறன் கொண்டுள்ளதாக இருக்கும். இது முந்தைய அமைப்பின் திறனான நிமிடத்திற்கு சுமார் 32,000 முன்பதிவுகளை விட மிகப் பெரிய வளர்ச்சியாகும்.
பழைய அமைப்பில் நிமிடத்திற்கு 4 லட்சம் பயணிகள் விசாரணைகள் (Enquiry) மட்டுமே கையாளப்பட்டன. தற்போது 'பயணி முன்பதிவு அமைப்பின்' (PRS) பின்னணி கட்டமைப்பு (backend) நிமிடத்திற்கு 40 லட்சத்திற்கும் அதிகமான விசாரணைகளை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வியக்கத்தக்க வகையில் 10 மடங்கு அதிகமாகும்.
பின்னணி செயல்பாட்டுத் திறனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம், அதிக நெரிசல் மிகுந்த நேரங்களில் இணையதளம் மெதுவாவது, 'டைம்-அவுட்' (time-out) ஆவது மற்றும் பரிவர்த்தனை பிழைகள் ஏற்படுவது போன்ற சிக்கல்களை கிட்டத்தட்ட முழுமையாக நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கைகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கலாம் என்பது மகிழ்வான விஷயம். முன்பதிவு செயல்முறையின் போது பயணிகள் தங்கள் விருப்பமான இருக்கைகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் வசதி இப்போது வழங்கப்படுகிறது. இது முற்றிலும் தானியங்கி இருக்கை ஒதுக்கீட்டு முறையிலிருந்து மாறுபட்டதாக அமையும். இருக்கை இருப்பை ஒப்பிட்டுப் பார்க்க பயணிகள் இனி தனித்தனி டேப்களுக்கு (tabs) மாறி மாறிச் செல்ல வேண்டியதில்லை.. ஒரே இடத்தில் ஸ்லீப்பர், ஏசி 3 டயர், ஏசி 2 டயர் போன்றவற்றின் இருக்கை இருப்பு விவரம் அறியலாம்.
கட்டண நாட்காட்டி (Fare Calendar) வசதியால் புதிய தேதி வாரியான நாட்காட்டி மூலம், பயனர்கள் ஒரே திரையில் பல்வேறு பயண தேதிகளுக்கான டிக்கெட் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இது பயணத் தேதியில் தங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் பயணிகள் குறைந்த கட்டணத்தை கண்டறிய உதவும்.
.
குறிப்பாக குழப்பங்கள் தரும் தேவையற்ற விளம்பரப் பதாகைகளை அகற்றுதல், எரிச்சலூட்டும் பாப்-அப்களைக் குறைத்தல், மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் CAPTCHA சரிபார்ப்பு சோதனைகளைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் முன்பதிவு செயல்முறை பெரிதும் சீரமைக்கப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு சுமுகமான மற்றும் விரைவான செக்-அவுட்டிற்கு வழிவகுக்கிறது.
மாணவர்கள், மாற்றுத்திறனாளி பயணிகள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட தகுதியுள்ள பயணிகள், இப்போது தங்களின் பயணச் சலுகைகளை பிரதான முன்பதிவு செயல்முறை மூலமாகவே நேரடியாகப் பெறலாம் என்பது சிறப்பு.
இந்தியாவின் பன்முக மக்கள்தொகைக்கு ஏற்ப புதிய IRCTC தளம் வலுவான பன்மொழி ஆதரவை வழங்குகிறது. இதன்மூலம், இடைமுகமானது பல இந்திய மொழிகளில் கிடைக்கிறது.
மேலும் இந்த போர்டல் மேம்படுத்தல்களுடன், ரயிலில் வழங்கப்படும் உணவுகளுக்கான கடுமையான உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு இணக்கத்தை உறுதி செய்வதற்காக, அங்கீகரிக்கப்படாத இ-கேட்டரிங் ஆபரேட்டர்கள் மீது IRCTC தனியாக நடவடிக்கை எடுத்துள்ளதையும் கவனத்தை ஈர்க்கிறது.
புதிய பயனர் இடைமுகம் (user interface), விரைவான லோடிங் , மற்றும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு ரயில் முன்பதிவு செயல்முறை போன்ற பயன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய டிஜிட்டல் அமைப்பின் மூலம், இந்திய ரயில்வே நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு வேகமான, மிகவும் நம்பகமான மற்றும் பயன்படுத்த எளிதான முன்பதிவு அனுபவத்தை வழங்குவது உறுதி.
ரயில் பயணத்தில் பிரியமுள்ளவர்கள் இந்த புதிய இணையதளத்தில் முன்பதிவு அனுபவத்தை பெற ஆர்வமாக உள்ளார்கள்.