ஆதார் அட்டை வழங்குவதில் முறைகேடு செய்த 1000 ஆப்பரேட்டர்கள் நாடு முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி காவல்துறை, வங்கி முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்கும் போது, ஆதார் அட்டையின் பாதுகாப்பு தொடர்பான குறைபாடு அம்பலமானது. ஆதார் அடையாள அட்டையை தயாரிக்கும்போது, நபரின் முகம் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகள் பொருந்து கின்றனவா என்பதை ஆதார் ஆணையம் கவனிக்கத் தவறியிருப்பதாக ஆதார் ஆணையத்துக்கு டெல்லி காவல்துறை கடிதம் மூலம் தெரிவித்தது.
ஒரே நபரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பனிரெண்டு நபர்களுக்கு வெவ்வேறு பெயர்களில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கை ரேகை வெவ்வேறாக இருந்தாலும் ஒரே மாதிரியான புகைப்படம் இருப்பதாக டெல்லி போலீசார் தங்கள் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட முகவரின் சான்றுகள் மற்றும் சிலிக்கான் கைரேகைகளைப் பயன்படுத்தி மோசடி நடத்தப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து சிலிக்கான் கைரேகைகளைப் பெற்றும் ஐரிஸ் ஸ்கேன் வண்ண நகலைப் பயன்படுத்தியும் தவறு நடந்திருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஆதார் அமைப்பு ஒரு நபரின் 10 விரல் கைரேகைகளையும் வெவ்வேறு தனித்தனி அடையாளங்களாகக் கருதாமல், ஒரே அடையாளமாக கருதுகிறது. இவைபோன்ற குறைகளை எல்லாம் பயன்படுத்தி முகவர்கள் பல போலி ஆதார் அடையாள அட்டைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆதாரில் இடம்பெறும் 12 இலக்க எண் ஒருமுறை ஒருவருக்கு வழங்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அது அவருக்கானதாகும். வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படாது. ஆதார் விவரங்கள் மிகவும் பாதுகாப் பானது இதில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது என்று நம்பப்பட்டு வந்த நிலையில், இதிலும் மோசடி ஆசாமிகள் ஊடுருவி விட்டதை டெல்லி காவல்துறை வெளிச்சம் போட்டு காட்டிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆதார் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், ஆதார் சேவையில் மோசடி செய்த சுமார் 1000 ஆபரேட்டர்கள் நாடு முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாகக் தெரிவித்தனர். ஆதார் ஆணையத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஆபரேட்டர்கள் பணி செய்து வருகின்றனர். தனிநபர் விபரங்களை பதிவு செய்வதோடு பெயர் திருத்தம், முகவரி திருத்தம், முகவரி மாற்றம் போன்ற ஆதார் சேவைகளை அவர்கள் வழங்கி வருகிறார்கள். அதில் நடந்த முறைகேடு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட புகார்களின் அடிப் படையில், கடந்த ஓராண்டில் மொத்த ஆபரேட்டர்களில் சுமார் 1.2 சதவீதம் பேர் மோசடி நடவடிக்கைகளால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற வழக்குகளிலும் தேவையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதார் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.