தமிழ்நாடு அரசு இனி அரசின் எந்தவொரு பலன்களைப் பெறவும் ஆதார் எண் வழங்க வேண்டும் எனவும், ஆதார் எண் பெறும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் இனி ஆதார் அனைத்திற்குமே தேவை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும். ஆதாரை பயன்படுத்துவது அரசின் செயல்முறைகளை எளிதாக்குகிறது, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவருகிறது.
ஆதார் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA)யின் துணை அங்கீகார பயனர் முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமிக்கப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை மூலம் திட்டங்களின் பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறையே உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் தங்கள் உரிமைகளை நேரடியாக வசதியாகவும், தடையற்ற முறையில் பெறவும் உதவுகிறது. கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையானது IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்றவை ஆன்லைனில் செலுத்தப்பட்டு வருகிறது.
அரசின் பலன்களைப் பெறுவதற்குத் தகுதியுடைய ஒரு நபர், ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆதார் எண் இல்லாத, பலன்களைப் பெற விரும்புவோர் இதுவரை ஆதார் பதிவு செய்யவில்லையெனில் ஆதார் பதிவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
ஆதார் ஒதுக்கப்படும் வரை, ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும். ஆதார் இல்லாதோர் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் அலுவலக பாஸ்புக், நிரந்தர கணக்கு எண், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இனி எல்லாவற்றிக்கும் ஆதாரே ஆதாரம் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்!