‘அரசே குடிநீரை விற்பனை செய்வது நியாயமா?’ அண்ணாமலை அறிக்கை!

‘அரசே குடிநீரை விற்பனை செய்வது நியாயமா?’ அண்ணாமலை அறிக்கை!
Updated on

மிழக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவின் நிறுவனத்தின் மூலம் அரசே குடிநீரை விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2014 -15ம்ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்தபோது, அதனை இலவசமாக வழங்க வேண்டும். குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதை விட்டு விட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ என்ற சந்தேகம் எழுகிறது.

குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல் குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com