

ஒரு தாய், இரண்டு குழந்தைகள் பெறுவது இயல்பு. ஆனால் , இரண்டு தாய்மார்கள் சேர்ந்து ஒரு குழந்தையை பெறுவது மிக மிக அபூர்வம்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 2013 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அதிசயம் நிகழ்ந்தது.சாரா மார்ஷல் எனும் 40 வயது பெண்ணும்.மேகி லெய்க் என்று 35 வயது பெண்ணும் தோழிகள். இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர். அதற்காக, நியூயார்க் நகரில் உள்ள டாக்டர் ஆலன் காப்பர்மன் என்பவரின் ஆஸ்பத்திரியை அணுகினர்.
அங்கு மேகியின் கருமுட்டைகளை ஆய்வுக்கூடத்தில் ஒரு ஆணின் உயிரணுவுடன் கலந்தனர். பின்னர் அந்த கலவையை சாராவின் கருப்பையில் செலுத்தினர்.
இதன் மூலம்,சாராவின் வயிற்றில் கரு வளர்ந்தது.அந்த குழந்தை பெண் குழந்தையாக பின்னர் வெற்றிகரமாக பிறந்துள்ளது . குழந்தையின் பிறப்பு சான்றிதழில், பெற்றோர் என்ற இடத்தில், சாரா- மேகி என இரண்டு பெண்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் ஒரு குழந்தைக்கு இரண்டு தாய்மார்கள் கிடைத்தனர்.
இந்த சாதனையை அவர்கள் எளிதாக படைத்து விடவில்லை. இரண்டு தடவை முயன்றும், அது தோல்வியில் முடிந்தது, மூன்றாவது முயற்சியில் தான் இந்த சாதனை வெற்றிகரமாக நிகழ்ந்தது.
ஒரே தாய் இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்?
பிரிட்டனைச் சேர்ந்த இரட்டையர்கள் வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்து இருப்பது அன்மையில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மிச்செல் மற்றும் லாவினியா ஆஸ்போர்ன்(Michelle and Lavinia Osbourne) என்ற இரட்டையர்கள் கடந்த 49 ஆண்டுகளாக தங்களை சாதாரண இரட்டையர்களாக கருதி வந்த நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட DNA பரிசோதனையில் இருவரும் ஒரே தாய்க்கு பிறந்து இருந்தாலும், இவர்களின் தந்தை இரண்டு வெவ்வேறு நபர்கள் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.
இதன்மூலம் மிச்செல் மற்றும் லாவினியா ஆஸ்போர்ன் இருவரும் ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன்(Heteropaternal Superfecundation) என்ற அரிய உயிரியல் நிகழ்விற்கு பிறந்த பிரிட்டனின் முதல் இரட்டையர்கள் என்ற அடையாளத்தை பெற்றுள்ளனர்.
சாதாரண இரட்டையர்கள்(Fraternal Twins) என்பவர்கள் இரண்டு வெவ்வேறு கருமுட்டைகள் இரண்டு விந்தணுக்களால் கருவுறும் போது பிறப்பவர்கள். ஆனால் மிச்செல் மற்றும் லாவினியா ஆஸ்போர்ன் போன்ற இரட்டையர்கள், இரண்டு வெவ்வேறு கருமுட்டைகள் இரண்டு வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுறும் போது பிறப்பவர்கள்.
மிச்செல் மற்றும் லாவினியா சகோதரிகள் இந்த செய்தியை பிபிசி ரேடியோவின் The Gift நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளனர். அதில், தங்களுக்கு இந்த உண்மை 2022ம் ஆண்டு தெரியவந்ததாகவும், உண்மையில் இது ஒரு அதிசயம் என்று விவரித்துள்ளனர்.
இதுவரை உலகளவில் இத்தகைய கருவுறுதல் 20-க்கும் குறைவாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரிய உயிரியல் நிகழ்வானது சரியான நேரக் கணக்கீடு சரியாக அமைந்தால் மட்டுமே சாத்தியப்பட கூடியது.
தாய் மாதவிடாய் நேரத்தில் இரண்டு கருமுட்டைகளை வெளியிட வேண்டும். பொதுவாக விந்தணுக்கள் பெண்களின் இனப்பெருக்க உறுப்பில் 5 நாட்கள் வரை உயிர் வாழும், ஆனால் கருமுட்டையானது 12 முதல் 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழும்.அப்படியிருக்கையில் சம்பந்தப்பட்ட தாய் குறிப்பிட்ட அந்த 5 நாள் இடைவெளிக்குள் இரண்டு ஆண்களுடன் உடல் ரீதியான தொடர்பு கொள்ளும் போது அவரின் ஒவ்வொரு கருமுட்டையும் இரண்டு ஆண்களின் விந்தணுக்களால் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது என்கிறார்கள்.