பாலஸ்தீன போரே தேவையற்றது என்று பல நாடுகள் கூறி வரும் நிலையில், தற்போது ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இதனால், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல், வான்வழி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால், இஸ்ரேல் அதனை நிராகரித்து வந்ததது. இதுவரை போரில் 34 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், காசாவுக்கு நிவாரண பொருட்கள் எதுவும் தராததால், குடிநீர் பஞ்சம், உணவு பஞ்சம் என அனைத்தும் தலை தூக்கி நிற்கின்றன. இதனால் தொற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், போர் நிறுத்தம் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகின்றன. ஆனால், அமெரிக்கா பல்கலைகழங்களில் போருக்கு எதிரான மாணவ, மாணவிகளின் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால், 50க்கும் மேற்பட்ட பல்கலைகழங்களில் படிக்கும் 550க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். இந்த மாணவர்கள் போராட்டம் லண்டன், பாரீஸ் போன்ற நாடுகளிலும் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில்தான், 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்' (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விரைவில் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் மட்டுமல்லாது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை அதிகாரி ஹைம் ஹலிவி ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கைது வாரண்ட் ஓரிரு வாரங்களில் பிறப்பிக்கப்படும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதனால், பாலஸ்தீன போரும் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் குற்றம், தீவிரவாதம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்களை விசாரித்து வரும் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 90 களில் உருவானது. இதில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே, அந்த நீதிமன்றத்தின் உத்தரவுகள் பொருந்தும். சில ஆண்டுக்கு முன்னர், இந்த நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து, உடனே அமெரிக்கா அந்த நீதிமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியது. அதேபோல், அந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் யாரும் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்றும் கூறியது. இதனையடுத்து, இஸ்ரேல் பிரதமர் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த முடிவை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.