பத்து ரூபாய் காயின் கொடுத்து, அதை கடைக்காரர் வாங்க மறுத்த அனுபவம் உங்களுக்கு உண்டா? இல்லையென்றால் இன்னும் தமிழ்நாட்டின் பல ஊர்கள் உங்களுக்குத் தெரியாது என்றுதான் அர்த்தம். ஜிபேயில் 10 ரூபாய் கூட அனுப்பி வைத்துவிடலாம். ஆனால், பத்து ரூபாய் நாணயத்தை பெற தயங்குபவர்கள் நம்மூரில் நிறைய பேர் உண்டு.
10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வந்து 15 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆனால், அதன் நம்பகத்தன்மை பற்றிய வதந்திகளுக்கு மட்டுமே இன்னும் வயதே ஆகவில்லை. பேருந்துகள், பெட்டிக்கடைகள், சாலையோர வியாபாரிகளில் பலர் இன்னும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்கிக் கொள்ள தயங்குகிறார்கள். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், உங்களிடம் 10 ரூபாய் நோட்டு கிடைக்கும்போது கொண்டு வந்து தாருங்கள் என்று மறுப்பவர்கள் கூட அதிகம்.
ஒரு வழியாக பத்து ரூபாய் நாணய பயத்தை போக்க ரிசர்வ் வங்கி, நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறது. நாணயத்தின் நம்பகத் தன்மை குறித்து பல்வேறு புகார்கள் வந்ததால் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு கூடி விவாதித்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அரசு அலுவலகங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கக்கூடாது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும். பஸ்களில் இது தொடர்பாக அறிவிப்பு போஸ்டர் ஒட்ட வேண்டும்.
வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களிடமிருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக்கூடாது. அனைத்து வங்கிகளிலும் இது குறித்த அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்படவேண்டும்.
இது தவிர சில்லறை வர்த்த சங்கதினர்கள் உட்பட பல்வேறு சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சங்கத்தின் உறுப்பினராக உள்ள வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை வாங்கிக்கொள்ள தயங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வாங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
10 ரூபாய் நாணயத்திற்கு இப்போதுதான் விளக்கமளிக்கிறார்கள். இதுவரை ஏன் இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை? ஜிபே, பேடிஎம் வரத்துக்குப் பின்னர் கீரை வாங்குவது கூட டிஜிட்டில் வர்த்தகமாகத்தான் நடக்கிறது, இதற்கு மேல் விளக்கம் தருவது வேஸ்ட் என்கிறார்கள்.