இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர்: தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர்: தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை!

ஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே தற்போது போர் நடைபெற்று வரும் சூழலில், அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகத்திலிருந்து சென்றோரை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, அயலகத் தமிழர் நலத்துறையால் உடனடியாக உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அந்நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், 8760248625, 9940256444, 9600023645 என்ற எண்கள் மூலமாகவும், nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் அங்குள்ள தமிழர்களிடம் தொடர்பு கொண்டு, சுமார் எண்பத்து நான்கு நபர்களின் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் அங்கு மேற்படிப்புக்காகவும், திட்டப் பணிகளுக்காகவும் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சில சுற்றுலா பயணிகளும் அடங்குவர். இவர்கள் பெர்சிபா, எருகாம், பென் குரியான், கிழக்கு ஜெருசேலம், ஜெருசேலம் பல்கலைக்கழகம் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் தங்கி உள்ளனர்.

இந்தத் தகவல்கள் உடனே மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துத் தரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அங்குள்ள தமிழர்கள் தாங்கள் தற்போது நலமாக இருப்பதாகவும், தங்குமிடம் மற்றும் உணவுத் தேவைகளுக்கான சிரமங்கள் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு, தங்களுடன் தொடர்பில் இருக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து காணொளி மூலமாக தகவல் அனுப்பியுள்ளனர். மேலும், அயலகத் தமிழர் நலத்துறை மூலம் இஸ்ரேலில் உள்ள தமிழர்களின் இங்குள்ள குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, நிலைமை குறித்து தொடர் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அங்குள்ள சூழ்நிலை மற்றும் மத்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையில் அவர்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com