அடுத்த கட்டத்தை நோக்கி சென்ற ஆதித்யாL1 விண்கலம்!

அடுத்த கட்டத்தை நோக்கி சென்ற ஆதித்யாL1 விண்கலம்!
ISRO
Updated on

ந்தியாவின் இஸ்ரோ விண்ஞானிகள் சார்பில் சூரியனை நோக்கிய பயணத்தில் ஆதித்யா எல் 1 விண்கலம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றமடைந்துள்ளது என இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை உயரம் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனின் வெளிப்புறப் பகுதியை 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஆய்வுசெய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம், இஸ்ரோ கடந்த சனிக்கிழமை விண்ணில் செலுத்தியது.

ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலத்தின் புவிவட்டப் பாதை உயரம் முதல்முறையாக நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது.  இந்நிலையில், இரண்டாவது முறையாக இதன் உயரத்தை அதிகரிக்கும் பணிகள், இன்று அதிகாலை 2.45 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அப்போது, மொரீஷியஸ், பெங்களூரு, போர்ட்பிளேர் ஆகிய பகுதிகளில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து விண்கலம் கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை குறைந்தபட்சம் 282 கிலோமீட்டர், அதிகபட்சம் 40 ஆயிரத்து 225 கிலோமீட்டர் என்ற அளவில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுவட்டப் பாதையை அடுத்தகட்டமாக உயர்த்தும் பணிகள், வரும் 10ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com