திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டு... 750 காளைகள் கலக்கும் பிரம்மாண்ட வீர விளையாட்டு.

திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டு...
750 காளைகள் கலக்கும் பிரம்மாண்ட வீர விளையாட்டு.

மிழர் திருநாளானபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விழாக்களையும் விளையாட்டுக்களையும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்வதுண்டு. அந்த வகையில் காளைகளை அடக்கும் வீர விளையாட்டான மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் போன்ற பெயர்களில் அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் பிரியர்களிடையே பிரசித்தி பெற்றது. துள்ளிக் குதித்து ஓடிவரும் முரட்டுக் காளைகளை அடக்கும் வீர இளைஞர்களுக்கும் அடக்கவே முடியாமல் வெற்றிபெறும் காளைகளுக்கும் தங்கம் முதல் எண்ணற்ற பரிசுகளை போட்டி அமைப்பாளர்கள் வழங்குவதுண்டு.

      மதுரை அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் திருச்சி பெரியசூரியூர் தருமபுரி காரிமங்கலம் மற்றும் திருவண்ணாமலை தேனி போன்ற மாவட்டங்களில் வெகு விமரிசையாக நிகழ்ந்து வரும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி,  முதன் முறையாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரம்மாண்டமாக நடைபெறப் போகிறது. இதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.     
       நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வகையில் பயிற்சி பெற்ற காளைகளும் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் காளைகள் மற்றும் மாடுகள் ஒவ்வொரு பொங்கலின் போதும் நகரின் சுற்றுவட்டாரங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு நடைபெறும் மஞ்சுவிரட்டு, எருதாட்டம் போன்றவைகளில் கலந்துகொள்ளும். ஆனால் தங்கள் ஊரிலேயே முழுமையான அளவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்களும் காளைகளை வளர்த்து வருவோரும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்முறையாக திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது. முதல் கட்டப்பணியாக  ஜல்லிக்கட்டு போட்டிக்கான பார்வையாளர் கேலரி  மற்றும் போட்டிக்களம் அமைப்பதற்காக 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதனை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

        பொங்கல் பண்டிகையின் போது இங்கு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்தும் சுமார் 750-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்தப் ஜல்லிக்கட்டு போட்டியை சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிடும் வகையில் வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும்    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் கூறினார்.

தலைவர் ராஜசேகரன்
தலைவர் ராஜசேகரன்

ஜல்லிக்கட்டு பேரவை பரிந்துரையின் பெயரில் தமிழக அரசின் அனுமதி பெற்று திருச்செங்கோட்டில் முதல் முறையாக திருச்செங்கோடு மாட்டு இனங்களை நினைவு கூறும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் இடையிலும் நாட்டு மாடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  நடத்தப்பட உள்ளதாக திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவரான நடேசன் தெரிவித்துள்ளார். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண  அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com