

கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் சபாநாயகர் பி. தனபாலுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து தனது அதிருப்தியையும் வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தேர்தலில் அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக. இதனால் தனபாலுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து உருக்கமாக பேசியுள்ளார் தனபால்.
அவர் கூறுகையில், “கடந்த 1988-ல் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டது. விபரம் அறிந்து வந்த மாண்புமிகு அம்மா எனக்கு முதல் உதவி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதுதான் அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்” என உருக்கமாக பேசினார்.
நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனபாலுக்கு சீட் கிடைக்காத நிலையில் அவருக்கு ஆதரவுமாக பேசி உள்ளார். தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் “அதிமுக இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்த போதெல்லாம், முன்னின்று இயக்கத்தை காத்தவர் முன்னாள் சபாநாயகர் தனபால். கட்சிக்கு சோதனை வந்த காலங்களில், விசுவாசத்துடன் செயல்பட்ட ஒரு மூத்த தலைவருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் வழங்கப்படாதது நியாயமே இல்லை. பணம் இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும்” என தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார்.