நேஷனல் ஹெரால்டு வழக்கு; 2-ம் முறையாக சோனியா காந்தி ஆஜர்!

நேஷனல் ஹெரால்டு வழக்கு; 2-ம் முறையாக சோனியா காந்தி ஆஜர்!
Updated on

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக 2-வது முறையாக சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகியுள்ளார்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகள் விற்றதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது பாஜக கட்சியைச் சேர்ந்த சுப்ரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், கடந்த 21-ம் தேதி சோனியா காந்தி நேரில் ஆஜராகி அவரிடம் 2 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது

இந்நிலையில், 2-வது முறையாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார். காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப் பட்டது. 

இந்நிலையில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்  'சத்தியாகிரகம்' போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.

logo
Kalki Online
kalkionline.com