காயத்ரி ரகுராமுக்கு யெஸ், பெண் காவலருக்கு நோ சொன்ன கனிமொழி!

கனிமொழி
கனிமொழி

"பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பற்றி அவரது கட்சியில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும்" என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு நீக்கப்பட்டிருக்கிறார். 'ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை என்னை பற்றி தரக்குறைவாக பேசி இருக்கிறார். கட்சியின் ஆடியோ வீடியோ விவகாரத்தில் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பதவி பறி போகலாம் அல்லது குடும்ப ரீதியாக மன அழுத்தத்துக்கு ஆளாகலாம் என்பதால் பேச தயங்குகிறார்கள்' என்கிறார், காயத்ரி ரகுராம்.

காயத்ரி ரகுராம் தரப்பிற்காக குரல் கொடுக்கும் கனிமொழி, ஏன் விருகம்பாக்கம் பெண் காவலர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு குரல் கொடுக்கவில்லை என்று கமலாலயம் வட்டாரம் பதில் கேள்வி எழுப்பியிருந்தது. சம்பந்தப்பட்ட விழாவில் கனிமொழியும் பங்கேற்று பேசினார். பாதுகாப்புப் பணிகளுக்காக வந்திருந்த பெண் காவலரிடம் தி.மு.க நிர்வாகிகள் அத்து மீறி நடந்து கொண்ட செய்தி ஏனோ கனிமொழியின் கவனத்திற்கு வரவில்லை.

விருகம்பாக்கம் சம்பவம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கனிமொழி, 'கூட்டம் நடந்து முடிந்தபின்பு நடைபெற்ற சம்பவம் என்கிறார்கள். எல்லா இடங்களையும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நடந்த சம்பவம் வெட்கப்படவேண்டிய ஒன்று. நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டியது. அதனால்தான் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்' என்றார்.

சம்பந்தப்பட்ட பெண் காவலர் புகாரை வாபஸ் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகிகளை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்க தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கனிமொழி எதை குறிப்பிடுகிறார்? புகார் மனு ஏற்கப்பட்டிருக்கிறதா? தி.மு.க நிர்வாகிகள் கைது நடக்குமா? என்கிற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com