வந்தாச்சு கார்த்திகை.. ஐயப்பனை காண வரும் பக்தர்களே.. இன்று முதல் நடை திறப்பு!

வந்தாச்சு கார்த்திகை.. ஐயப்பனை காண வரும் பக்தர்களே.. இன்று முதல் நடை திறப்பு!
Updated on

ண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து அய்யப்பனை தரிசிக்க சபரிமலை செல்வது வழக்கம். நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.

ஐயப்பன் சந்நிதியில் இன்று மாலை தீபம் ஏற்றிய பின்னர், ஆழி குண்டத்தில் நெருப்பு ஏற்றப்படும். அதன்பிறகு நாளை அதிகாலை 3 மணிக்கு தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக் காலம் தொடங்கும்

இதனால், நாளை முதல் அதாவது 17 தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். 27 ஆம் தேதி மாலை நடை அடைக்கப்படும். மீண்டும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும்.

அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20 ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் என்ற இணையதளம் மூலம் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7,500 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com