கேரளாவின் மதுபான கொள்கையில் மாற்றம்: கள் இறக்க முக்கியத்துவம்!
கேரள மாநில அரசு கள் இறக்குவதற்கும் மற்றும் விற்பனைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மதுபான கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.
கேரள மாநிலத்தின் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான மதுபான கொள்கை சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயின் தலைமையில் சட்டமன்றத்தில் கலால் வரித்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுபான கொள்கையில் மூன்று முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக கலால் வரித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கூறுகையில்,கேரளாவில் உள்ள கள் இறக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாகவும் கள் விற்பனைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டும். கள் இறக்குவதற்கும் அதன் விற்பனைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கேரள கள் என்ற பெயரில் கள் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் விற்பனை செய்யப்படாமல் வீணாவதை தடுக்க வினிகர் போன்ற மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டு மது வகைகள் மற்றும் பீர் வகைகள் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதோடு வெளிநாடு மது விற்பனையை ஏற்றுமதி செய்வதற்கான விதிமுறையை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படும். வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ய கேரள மாநிலத்தில் 559 விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 309 விற்பனையாளர்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளனர்.
அனுமதி உள்ள மற்ற விற்பனையாளர்களும் அனுமதியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு மது வகைகளை தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில், ஐடி பார்க்குகளில் பயன்படுத்துவதற்காக விதிமுறையில் மாற்றம் செய்யப்படும். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தை குறைக்கும் விதமாக விமுக்தி என்ற பிரச்சார இயக்கத்தை தீவிர படுத்தவும், மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.