சட்டசபைக்கு வந்த முதல் நாளே இளங்கோவனை நெளியவிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!

சட்டசபைக்கு வந்த முதல் நாளே இளங்கோவனை நெளியவிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!
Updated on

மிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கொடுக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர், ’ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டுக்கே பட்டா கிடையாது. இதைச் சொன்னால் யாராவது நம்புவீர்களா?’ எனவும் கூறியதோடு, ’ஆனால் உண்மை அதுதான் என்றும், இதோ இளங்கோவன் அண்ணாச்சியை கூட கேட்டுப்பாருங்க’ எனவும் அவரை கோர்த்து விட்டார்.

அது மட்டுமின்றி, ’பெரியார் வீட்டுக்கு பட்டா இல்லை என்றும் இந்த தகவலை தாம் முதலமைச்சரிடம் கூறியபோது அவரே ஆச்சரியப்பட்டு போனார் என்றும், எப்படி இவ்வளவு பெரிய ஆட்கள் விட்டார்கள் என தன்னிடம் கேட்டதாகவும் அவர் கூறினார். ஆகையால், பட்டா விடுபட்டவர்களுக்கு முதல் வேலையாக பட்டா கொடுப்பதற்கு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பிறகு இளங்கோவன் இன்று தான் முதல் முறையாக சட்டசபைக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் தன்னை ஒரு விவாதப் பொருளாக்கும் வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியது  இளங்கோவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சட்டசபைக்கு வந்த முதல் நாளே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி அமைச்சர் நெளியவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Kalki Online
kalkionline.com