சுற்றுலா என்றாலே தமிழ்நாட்டில் நினைவுக்கு வரும் மலைவாசஸ்தலத்தில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபலமான கொடைக்கானல் மலைப் பிரதேசம்தான். அதிக செலவின்றி உடல் வருடும் மிதமான குளிரில் இயற்கையை ரசித்து மகிழ ஏற்ற அருமையான இடமாக உள்ளது கொடைக்கானல். கொடைகானலில் உள்ள வனத்துறையின் கட்டுப்பாட்டில் மேயர் சதுக்கம், பைன்மரங்கள் காடு, பில்லர் ராக், குணா குகை போன்ற இடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பயணிகள் வருகை புரிகின்றனர். இந்த ஆண்டும் கோடை விடுமுறையை கழிக்க சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து சென்றதாகத் தகவல்கள் கூறுகிறது.
கொடைக்கானல் வருபவர்கள் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களை கண்டுகளிப்பது வழக்கம். ஆனால், விடுமுறை நாட்களில் வரும் அதிகளவு பயணிகளால் போக்குவரத்து நெரிசலுடன் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் பாதிக்கப் படுகின்றன. இதனால் வரும் சுற்றுலாவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்ட வனத்துறையினர் வனப்பகுதிகளில் உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர முடிவு செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும்வரை முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
மேயர் பாறை, பைன் மரக்காடுகள், தூண் பாறை மற்றும் குணா குகைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவலுடன் கொடைக்கானல் வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இருப்பினும் விரைவில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து அனைத்து வசதிகளுடன் மீண்டும் புதிய பொலிவுடன் கொடைக்கானல் திகழும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் வனத்துறையினர்.