–ரா.செல்வகுமார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தற்போது ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால், அது வலுவடைந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதால் நாளை முதல் (நவம்பர் 9 ம்தல் 12 தேதி வரை) தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை, கோயம்பேட்டில் காய்கறிக் கடை வியாபாரிகள் தெரிவித்ததாவது:
கனமழை காரணமாக வெளியூர்களிலிருந்து காய்கறி வரத்து குறைவாக உள்ளதால் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை இரண்டு மடங்கு அதிகரித்து 80 ரூபாய்க்கும் ,சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 60 ரூபாய்க்கும் , கேரட் 90 ரூபாய்க்கும் , பீட்ரூட் கிலோ 40 ரூபாய்க்கும் , கத்தரிக்காய் ரூபாய் 60க்கும் விற்பனையாகி வருகிறது. அதே போல் உருளைக்கிழங்கு கிலோ 40 ரூபாய் எனவும் அவரைக்காய் 80 ரூபாயாகவும், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் சில்லறை வணிக வியாபாரிகள் கிலோ தக்காளியை ரூ.100 முதல் 110 வரை விற்பனை செய்து வருவது கவனிக்கத்தக்கது. கனமழை பெய்து வருவதால் காய்கறிகள் விலை மேலும் உயரும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.