
குலசேகரன்பட்டினத்தில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொதுவாகவே தசரா திருவிழா என்றால் அது வடமாநில பண்டிகை தான். ஆனால் தமிழகத்தில் ஒரு தசரா நடைபெறுகிறது என்றால் அது தூத்துக்குடியில் தான். ஆண்டு தோறும் இந்த திருவிழா நவராத்திரியின் போது விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து சாமி வேடமணிந்து வலம் வருவர்.
அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.
தசரா திருவிழாவின் 9ஆம் நாளான திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் உச்ச சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
குலசை சூரசம்ஹார விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலை மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிசன் தலை, சிங்கம் தலை, எருமைத் தலை, சேவல் உருவம் என மகிஷாசூரன் சம்ஹாரம் நடந்தது. தீமையை அழித்து, நன்மையை அம்பிகை நிலைநாட்டுவதான் இதன் ஐதீகம். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.
குலசை சூரசம்ஹார விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் புறநகரில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில், சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.