பிரிஜ் பூஷனுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்: மல்யுத்த வீரர்கள்!

பிரிஜ் பூஷனுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்: மல்யுத்த வீரர்கள்!

மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக இனி சாலையில் இறங்கி போராடமாட்டோம். ஆனால், அவருக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வினீஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங்கள் புனியா உள்ளிட்டோர் கூறியுள்ளதாவது:

பிரிஜ்பூஷன் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் மூலம் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. இனி வீதியில் இறங்கி போராடுவதில்லை என முடிவு செய்துள்ளோம். ஆனாலும் அவருக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும். நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்திய மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும், தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முறையாக நிறைவேற்றப்படும். ஜூலை 11 இல் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று நம்புகிறோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மல்யுத்த வீர்ர்களுக்கு ஆசிய போட்டிகளுக்கான பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தாற்காலிக குழு முடிவு செய்துள்ளது பற்றி முன்னாள் மல்யுத்த வீர்ரும், பா.ஜ.க. பிரமுகர்களில் ஒருவருமான யோகேஷ்வர் தத் கேள்வி எழுப்பியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தனர். பிரிஜ் பூஷன் தலைவர் பதவியை உங்களுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறாரா? என்றும் பதில் கேள்வி எழுப்பினர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்பட வேண்டும். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மல்யுத்த வீர்ர்கள், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பிரிஜ் பூஷன் மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இதைத்தொடரந்து ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாகவும் அறிவித்தனர். பின்னர் விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகைக் விடுத்த வேண்டுகோளை ஏற்று அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை போராட்டக்குழுவினர் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை அழைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜூன் 15-ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதி தெரிவித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.

இதனிடையே பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பான புகார்களை அடுத்து பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் மீது தில்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com