கோவை அருகே தாயை பிரிந்த ஒரு குட்டி குதிரை, அவ்வழியாக சென்ற பேருந்தில் இருந்த குதிரை படத்தைப் பார்த்து தன் தாய் என்று நினைத்து, அந்த பஸ்ஸை பின்தொடர்ந்து ஓடியது காண்போரை கலங்க வைத்தது.
கோவை பேரூர் பட்டீஸ்வரம் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிகின்றன.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக இக்கூட்டத்தில் இருந்த தாய் குதிரை வேறெங்கோ சென்றுவிட, அதன் குட்டி தன் தாயைத் தேடி சுற்றி வந்தது.
இந்நிலையில் இன்று பேரூர் பேருந்து நிறுத்தம் அருகே காந்திபுரம் செல்லக் கூடிய தனியார் பேருந்தில் குதிரை படம் ஒட்டப்பட்டிருக்க, அதை பார்த்த அந்த குட்டி குதிரை, தன் தாய் என நினைத்து, அந்த படத்தை உச்சி மோர்ந்து ஏக்கமாக பார்த்தபடி நகராமல் நின்றது.
தன் தாயை அழைக்கும் வகையில் கனைத்தது. இந்நிலையில் பேருந்து கிளம்பிவிட, குட்டி குதிரையும் விடாமல் பஸ்ஸை துரத்தி கொண்டே ஓடியது. இது காண்போர் மனதை கலக்கமடைய செய்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.