

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு இன்று (ஜூன்.15 ) நாமக்கலில் கூடியது. லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ச்சியாக டீசல் விலையைக் குறைக்க வேண்டும், நெடுஞ்சாலை டோல் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்று பலமுறை போராடியுள்ளனர். இது தொடர்பாக மத்திய , மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் செவிசாய்க்கபட வில்லை.
தற்போது லாரி தொழில் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். அதனால் அவசரமாக கூட்டப்பட்ட இந்த செயற்குழுவில் ஒரு அதிரடி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் படி வருகிற ஜூன் 15 ஆம் தேதி முதல் லாரி வாடகை கட்டணத்தை 25% வரை உயர்த்த உள்ளனர்.
சர்வதேச அளவில் பொருளாதார சூழ்நிலைகள் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்திலும் அதன் பாதிப்பை காட்ட உள்ளது. ஈரான் போரினால் தொடர்ச்சியாக எரிபொருள் விலை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால், லாரி உரிமையாளர்களுக்கு அதிக பொருளாதார சுமை ஏற்படுகிறது.
அது மட்டுமல்லாமல் ஏராளமான மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்ச்சியாக செயல்பாட்டிற்கு வருவதால் அங்கு ஏராளமான டோல்கேட்டுகளும் நிறுவப்பட்டுள்ளன. இங்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணங்கள் தற்போது அதிகரித்து உள்ளது. முன்பை விட பல இடங்களில் புதிதாக டோல்கேட்டுகள் முளைத்துவிட்டன. இதனால் அதிக அளவில் டோல் கட்டணங்கள் கட்ட வேண்டி உள்ளது.
லாரிகள் தினசரி போக்குவரத்து செயல்பாட்டில் இருப்பதால் அதற்கான தேய்மானம் அதிகமாகிறது. இதற்காக குறிப்பிட்ட தொலைவு பயணத்திற்கு ஒரு முறை ஆயில் மாற்ற வேண்டி இருக்கும். அதிக தூரம் பயணிப்பதால் டயர்கள் விரைவிலேயே தேய்த்து விடுகிறது. ஒரு நீண்ட தூர பயணத்திற்கு ஒருமுறை லாரியின் முக்கிய பாகங்களை சோதனை செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அடிக்கடி உதிரி பாகங்கள் மாற்றப்படுவதால் அதன் மூலமும் செலவினங்கள் அதிகரிக்கிறது.
இது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை இன்சூரன்ஸ் கட்டணம் தனியாக கட்ட வேண்டும். பல நேரங்களில் போக்குவரத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் வழங்க வேண்டியுள்ளது. இது போன்ற காரணங்கள் லாரி தொழிலை கடுமையான சரிவிற்கு கொண்டு சென்றுள்ளன. அதிலும் மிகவும் முக்கியமாக எரிபொருள் விலையேற்றம் மற்றும் டோல் கட்டணங்கள் இந்த போக்குவரத்து தொழிலை கடுமையான சிக்கலுக்கு கொண்டு சென்றுள்ளது.
இதனால், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தினை சரி கட்டவும் , தொடர்ந்து இந்த தொழிலை நடத்தவும், லாரிகளின் வாடகையை உயர்த்த முடிவு செய்துவிட்டனர். 25 சதவீதமாக உயர்த்தப்படும் லாரி வாடகை கட்டணம் , சரக்கு போக்குவரத்து துறையில் மிகக் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும்.
அதிகரிக்கும் லாரி வாடகை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதே அளவில் அதிகரிக்கும். இதனால் தினசரி உணவுப் பொருட்களான அரிசி , பருப்பு வகைகள் , காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் 25% வரை உயர வாய்ப்புள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தால் , உணவகங்களிலும் உணவு பட்டியலில் விலை அதிகரிக்கும்.
இதனை தொடர்ந்து கட்டுமானப் பொருட்களான செங்கல், எம். சாண்ட், பி. சாண்ட் , சிமெண்ட் , கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும். இது புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு பொருளாதார சுமையை அதிகரிக்கும். இது மட்டுமின்றி சரக்குப் போக்குவரத்து பொருட்களின் கட்டணமும் உயரும். இதனால் , விலைவாசி உயர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு வர உள்ளது.