மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 2025 ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து ரூ.9,568.4 கோடி நஷ்டம் அடைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மோஹல், மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இடம்பெற்றுள்ளன. இவை தற்காலிக புள்ளிவிவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற விமான நிறுவனங்களின் நிலை:
கடந்த நிதியாண்டில், மற்ற முக்கிய விமான நிறுவனங்களின் செயல்திறன்:
அகசா ஏர்: வரிக்கு முந்தைய இழப்பு ரூ.1,983.4 கோடி.
ஸ்பைஸ்ஜெட்: வரிக்கு முந்தைய இழப்பு ரூ.58.1 கோடி.
இன்டி கோ: வரிக்கு முந்தைய லாபம் ரூ.7,587.5 கோடி.
நஷ்ட விவரங்கள்
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் மட்டும் ரூ.3,890.2 கோடி இழப்பை சந்தித்தது. நீண்ட காலமாக லாபத்தில் இயங்கி வந்த அதன் குறைந்த கட்டண துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ரூ.5,678.2 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
கடன் விவரங்கள்:
விமான நிறுவனங்களின் கடன் நிலவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா: ரூ.26,879.6 கோடி.
இன்டி கோ: ரூ.67,088.4 கோடி.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: ரூ.617.5 கோடி.
அகசா ஏர்: ரூ.78.5 கோடி.
ஸ்பைஸ்ஜெட்: ரூ.886 கோடி.
ஏர் இந்தியா மற்றும் லாபகரமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் டாடா குழுமம் ஜனவரி 2022 இல் கையகப்படுத்தியது. ஏர் கார்ப்பரேஷன் சட்டம் 1994 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து தனியார்மயமாக்கப்பட்டது. நிதி மற்றும் செயல்பாட்டு முடிவுகள் அந்தந்த விமான நிறுவனங்களால் வணிகரீதியான காரணங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன என்று அமைச்சர் முரளீதர் மோஹல் தெரிவித்தார்.