

இந்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தோராயமாக 290 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய இருதினங்களில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டணிகள் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் தேர்தல் உத்திகளுக்கான குழு தனது விரிவான அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் முறைப்படி அளிக்க உள்ளது. இதை எதிர்பார்த்து கார்கே ஜனவரி 4 ஆம் தேதி ஒரு முக்கியமான கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளார். அனைத்து மாநிலத் தலைவர்கள், மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்கள் தொகுதிப் பங்கீடு விவகாரத்தை இந்த கூட்டத்தில் இறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 85 தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கேட்டுப்பெற காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த நடவடிக்கை வரவிருக்கும் தேர்தலுக்கு ஒரு கூட்டு மற்றும் வலிமையான முன்னணியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள் விவாதத்திற்குப் பிறகு சீட் பகிர்வு தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்ய காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் நலன் மற்றும் பலங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் அதன் தேர்தல் வாய்ப்புகளை அதிகப்படுத்தி ஐக்கிய முன்னணியை ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்ல காங்கிரஸ் விரும்புகிறது.