சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி - மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி - மாணவர்கள் அதிர்ச்சி
Updated on

சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இளங்கலை மாணவர்களுக்கான 3-வது செமஸ்டர் தமிழ் தேர்வு எழுத மாணவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு சென்றபின் அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

வினாத்தாளை பார்த்ததும் மாணவர்கள் திகைத்துப்போயினர். அது 4-வது செமஸ்டர் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள். இன்று நடக்க இருந்தது 3-வது செமஸ்டர் தமிழ் தேர்வு . அடுத்த முறை எழுத வேண்டிய தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டிய வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து கல்லூரிகள் தரப்பில் பல்கலைக் கழகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனால் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த வினாத்தாள் குளறுபடி குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தேர்வு உரிய முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதையடுத்து இன்று நடக்க இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் அந்த தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com