மகாராஷ்டிரா கிரேன் விபத்து: உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல், நிதியுதவி!

மகாராஷ்டிரா கிரேன் விபத்து: உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல், நிதியுதவி!

காராஷ்டிரா மாநிலம், தானேவின் ஷாஹாபூரியில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி அதிவிரைவுச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் ஒன்று நேற்று உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றும் சிலர் காயமடைந்து இருக்கின்றனர். உயிரிழந்த இருபது பேரில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிலிருந்து பணி நிமித்தமாக சென்று உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கும் தனது ஆறுதலையும், நிவாரண உதவியையும் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் தமிழக அரசு செய்திக் குறிப்பில், ‘‘மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானப் பணியின்போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும், அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச்  சேர்ந்த கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்ச ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தவிட்டு உள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, இந்த கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com