மார்ச் 12-க்குள் ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Dhoni's
MS Dhoni
Published on

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது அரங்கேறிய சட்டவிரோத சூதாட்டம் மற்றும் "ஸ்பாட் பிக்சிங்" புகார்கள் இந்திய கிரிக்கெட் உலகையே உலுக்கின. ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால், இவ்விரு அணிகளும் இரண்டு ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இந்தச் சர்ச்சையின் போது சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெயரும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தோனி மீது பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்ட போதிலும், ஐபிஎல் சூதாட்டம் அல்லது ஸ்பாட்-பிக்சிங் தொடர்பாக அவர் மீது எந்தவொரு அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டோ அல்லது ஆதாரமோ நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. எனினும், விசாரணை அதிகாரியாக இருந்த சிபிசிஐடி ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், தொலைக்காட்சி விவாதங்களில் தோனிக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் புகார்களைக் கூறியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மீது எம்.எஸ். தோனி 2014-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். தனது நற்பெயருக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், தனது பெயரில் கருத்து தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தோனி அந்த மனுவில் கோரியிருந்தார்.

இதற்கிடையே, நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் விசாரணைக் கமிஷன் குறித்து சம்பத் குமார் தெரிவித்த சில கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டு, அவர் மீது தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முக்கியத்துவம் பெற்றது. இவ்வழக்குகளுக்கு எதிராக சம்பத் குமார் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தோனி மற்றும் சம்பத் குமார் இடையேயான இந்த 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பத் குமார் பங்கேற்ற அந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் குறுந்தகட்டை (CD) முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய சூழல் எழுந்தது.

இந்த விவாத நிகழ்ச்சியின் சிடியை (CD) எழுத்து வடிவமாக (Transcript) மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டும் என தோனிக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை மார்ச் 12-ஆம் தேதிக்குள் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்குச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும் இந்த வழக்கில், நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மார்ச் 12-ஆம் தேதிக்குள் தோனி தரப்பு இந்தக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அடுத்தகட்ட விசாரணையில் இந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு அல்லது முக்கிய நகர்வுகள் அமையும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்திற்கு காரணம் விமானியா? வெளியான அதிர்ச்சி தகவல்!
Dhoni's

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com