‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்? மல்லிகார்ஜுன கார்கே மறுப்பு!

‘இந்தியா’ எதிர்க்கட்சி  கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்? மல்லிகார்ஜுன கார்கே மறுப்பு!

ந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மறுத்துவிட்டார்.

தில்லியில் நேற்று இந்தியா எதிர்க்கட்சி  கூட்டணியின் 4-வது கூட்டம் நடைபெற்றது, அக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முன் மொழிந்தார். ஆனால், இதற்கு கார்கே மறுப்பு தெரிவித்து விட்டார்.

தில்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இப்பிரச்சினையை  எப்படி கையாள்வது என்பது குறித்தும்  ஆலோசிக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் முடிவுக்குப்பின் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை, இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என மம்தா பானர்ஜி நேற்றைய கூட்டத்தில் விருப்பம் தெரிவித்தார்.

காங்கிரஸ்கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் இருந்து எப்போதும் விலகியிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், இத்திட்டத்தை வழிமொழிந்தார்.எதிர்க்கட்சி கூட்டணியில் மல்லிகார்ஜூன கார்கே முக்கியமான தலித் தலைவர் என்பதால், இந்த திட்டத்துக்கு இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள 12 தலைவர்கள் உடனடியாக ஒப்புதல் தெரிவித்தனர்.

இது சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, இத்திட்டத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார். ‘‘நான் கீழ்தட்டு மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன்.  இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி முதலில் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை எம்.பி.க்களை பெறுவதற்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதில் பயன் இல்லை’’ என கார்கே கூறினார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல்பெயரை அறிவிக்க, இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என்பது நேற்றைய கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகள் மூலம் தெளிவாகியுள்ளது.

இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர்கள் 4 பேர் கொண்ட தேசியகூட்டணிகுழு அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த குழுவுக்கு மூத்த தலைவர் மோகன் பிரகாஷ் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். முன்னாள் முதல்வர்கள் அசோக்கெலாட், பூபேஷ் பாகெல், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் முகுல் வாஷ்னிக் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்ததாக அதன்பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார். இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் கூட்டம் தில்லியில் நேற்று தொடங்குவதற்கு முன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த மல்லிகார்ஜூன கார்கே, ‘‘தொகுதிப் பங்கீடு குறித்து மாநில அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் பிரச்சினை ஏற்பட்டால், அது குறித்து மத்தியில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com