

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் முதலமைச்சரானதை தொடர்ந்து , மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் தலைவியான மம்தா பானர்ஜியின் மருமகனும், அவரது அரசியல் வாரிசுமான அபிஷேக் பானர்ஜி தனது கட்சியினர்களை நலம் விசாரிக்க சென்ற போது உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டினார்.
அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர் கட்சியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 20 பேர் மட்டுமே அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர். மீதமுள்ள 60 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை.இந்த நிலையில் இன்று மம்தா பானர்ஜி , தன் கட்சியில் உள்ள பல அமைப்புகளை அடியோடு கலைத்துவிட்டார்.
இன்று மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த ரிதாப்ரதா பானர்ஜி சபாநாயகரை சந்தித்து தனக்கு 60 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி கடிதத்தினை வழங்கினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக தன்னை அங்கீகரிக்குமாறு வேண்டுகோளும் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து ஆய்வு செய்த சபாநாயகர் ரிதாப்ரதாவை எதிர்கட்சி தலைவராக அங்கீகரித்து விட்டார். இதனால், மம்தா பானர்ஜியின் அணியின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்ற அந்தஸ்தும் போய்விட்டது. இதனால் , உடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா அணி மிகவும் பலவீனமாகி விட்டது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ரிதாப்ரதா, கட்சியை உடைக்கும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்றும் எப்போதும் மம்தா பானர்ஜி தான் எங்களின் தலைவர் என்றும் பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மோசமான செயல்பாடுகள் தான் கட்சியை இந்த அளவுக்கு தோல்வியில் தள்ளி உள்ளது . ஒரு தனி நபருக்கு எதிரான கூட்டுப் போராட்டம் தான் எங்களின் செயல் என்றும் விளக்கியுள்ளார்.
கடந்த வாரம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவராக சோபன்தேப் சட்டோபாத்யாயையும் , தலைமை கொறடாவாகவும் ஃபிர்ஹாத் ஹக்கீமை அங்கீகரிக்குமாறு சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அபிஷேக் பானர்ஜி வழங்கிய கடிதத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் போலியாக போடப்பட்டது, என்று ரிதாப்ரதா கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் அந்த முன்மொழிவை ஏற்கவில்லை. இந்த மோசடி குறித்து சிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிஜடி அபிஷேக்கை விசாரணைக்கு அழைத்துள்ளது.ரிதாப்ரதாவை எதிர்கட்சி தலைவராக அங்கீகரித்தது மம்தா பானர்ஜிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.