பிரபல மாருதி சுசுகி நிறுவனம், சுமார் 87 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.S-Presso மற்றும் Eeco மாடல் கார்களை மாருதி திரும்ப பெறுவதாகவும், மொத்தமாக 87,599 யூனிட்களை திரும்ப பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ, ஈகோ போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட கார்களில் உள்ள ஸ்டியரிங் டை ராடு-இல் பிரச்சினை இருப்பதே, கார்களை திரும்ப பெறுவதற்கான காரணம் ஆகும். இந்த குறைபாடு காரணமாக, காரை சீராக ஓட்டுவதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான தகவல் வழங்கப்படும். பிறகு பாதிக்கப்பட்ட கார்களை ஆய்வு செய்து, ஸ்டியரிங் டை ராடை இலவசமாக மாற்றிக் கொடுக்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி முதல், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட எஸ் பிரஸ்ஸோ (S PRESSO) மற்றும் ஈக்கோ (EECO) ரக கார்களில் பழுது ஏற்பட வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டீரிங் இணைப்பில் பழுது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
கார்களை திரும்பப்பெறும் இந்த நடவடிக்கை நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபகாலத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மேற்கொண்ட மிகப் பெரிய திரும்பப்பெறும் நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது.