

இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை , தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே முதல்வர் விஜய்யை சந்திக்க புறப்பட்டார். தமிழக அரசியலில் இந்த செய்தி பெரும் சூட்டை கிளப்பியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பெரும்பான்மை பலம் பெறாத தவெகவிற்கு திமுக கூட்டணியில் இருந்த , விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் , காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவு கொடுத்து அரசாங்கத்தை காப்பாற்றின.
அந்த நேரத்தில் விஜய் ஒரு அதிரடி முடிவினை எடுத்தார். அதன்படி தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார். இதற்கு முன்னர் மைனாரிட்டி அரசை திமுக அமைத்திருந்தாலும் கூட்டணியை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கொடுத்தது இல்லை.
விஜயின் இந்த முடிவு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பாதிப்பினை உருவாக்கியது. அதன் பின்னர் அதிமுகவை சேர்ந்த ஒரு குழு தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரையில் பங்கு பெற விரும்பியது. ஆயினும் , அந்த அணியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருந்ததாலும் , ஏற்கனவே தவெக உடன் கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அந்த முடிவு கைவிடப்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்ற உடன் வைகோ வீட்டிற்கு விஜய் சென்று சந்தித்தார். அந்த சந்திப்பின் பொழுது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அவரது மகன் துரை வைகோவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். வைகோ வீட்டு பணியாளர்கள் எல்லாம் விஜயினை வரவேற்ற விதம் திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து துரை வைகோ, விஜய் திருச்சிக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றபோது விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு கொடுத்தார்.
அதன் பின்னர் மதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே கடுமையான உரசல் நிலவி வந்தது. சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சீட்டுகளை பெறும் போதே தங்களின் தனி சின்னமான பம்பரத்தில் தான் நிற்போம் என்று மதிமுக வலியுறுத்தியது. ஆயினும், திமுக அதற்கு உடன்படவில்லை. உதயசூரியன் சின்னத்தில் தான் மதிமுக கட்சியினரும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
பொதுவெளியில் தாங்கள் தனிசின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் தவெகவிற்கு ஆதரவு கொடுக்க முடியும். ஆனால், தாங்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக துரை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். இந்த பேச்சு திமுகவினரை மேலும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக தங்களது கூட்டணி வைத்து சென்ற கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் மதிமுகவும் சேர்ந்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 3 மணி அளவில் முதல்வர் விஜய்யை , வைகோ சந்தித்து பேசி வருகிறார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்த வைகோ சென்றுள்ளதாக கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதற்கு முன்னர் அமைச்சரின் சந்திப்பு யூகங்களை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுவரை மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாகியுள்ளது.
மதிமுகவும் திமுக கூட்டணி விட்டு விலகி தவெக கூட்டணியில் சேர தயாராகி உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு நடந்தால் மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள்.